இது சும்மா ட்ரைலர் தான்! தாண்டிக்குடி தள்ளாடி போச்சு..விஜய்க்கு விடை கொடுத்த திண்டுக்கல்..விரைவில்..
திண்டுக்கல்: அரசியல் களத்தில் இறங்கிய பின் முதல் முதலாக மதுரை வந்த விஜய்க்கு மிக பிரம்மாண்டமான வரவேற்பு கொடுக்கப்பட்டது. தொடர்ந்து திண்டுக்கல்லில் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட விஜய், இன்று மீண்டும் சென்னை புறப்பட்டு சென்றார். வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு நின்று விஜய்க்கு விடை கொடுத்தனர். விரைவில் மீண்டும் விஜய் மதுரைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக இருக்கும் விஜய் கடந்த ஆண்டு அரசியலில் குதித்தார். தமிழக வெற்றி கழகம் எனும் கட்சியை ஆரம்பித்ததோடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் பிரம்மாண்ட மாநாட்டின் மூலம் அதிகாரப்பூர்வமாக அரசியலுக்குள் நுழைந்தார்.
தொடர்ந்து அறிக்கை, ட்விட்டர் அரசியல் மட்டுமே செய்து வருவதாக விஜய் மீது குற்றச்சாட்டு எழுந்தது. ஒர்க் பிரம் ஹோம் அரசியல்வாதி என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இந்த நிலையில் விஜயை முதலில் களத்திற்கு வரச் சொல்லுங்கள் என திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்தன.

இந்த நிலையில் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினரை சந்தித்தது, கோவையில் பிரம்மாண்ட பூத் கமிட்டி கூட்டம் ஆகியவற்றில் விஜய் கலந்து கொண்டது தலைப்புச் செய்தியானது. இதற்கிடையே தனது கடைசி படமான ஜனநாயகன் படத்தில் விஜய் நடித்து வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல் பகுதியான தாண்டிக்குடியில் நடைபெற திட்டமிட்டு இருந்தது. இதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜய் சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்தார்.
கோவையை போல போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடாது என்பதற்காக விஜய் ரோட் ஷோ நடத்தக் கூடாது என மதுரை காவல்துறை உத்தரவிட்டது. அதே நேரத்தில் காவல் துறை கட்டுப்பாட்டையும் மீறி ஆயிரக்கணக்கானோர் திரண்டு நின்று விஜயை வரவேற்றனர். தொடர்ந்து சாலை மார்க்கமாக விஜய் தாண்டிக்குடி சென்றார். அங்கு நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கி இருந்த அவர் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு காரில் சென்று வந்தார்.
அப்போது காலையும் மாலையும் ஆயிரக்கணக்கான கிராம மக்கள் தினமும் திரண்டு நின்று விஜயை வரவேற்றனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெகுவாக பகிரப்பட்டது. இந்த நிலையில் திட்டமிட்டபடி படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இன்று விஜய் சென்னை செல்வதற்காக மதுரை சென்றார். தாண்டிகுடியிலிருந்து கொடைரோடு வழியாக மதுரை செல்ல திட்டமிடப்பட்டிருந்த நிலையில் சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கானோர் கூடி நின்று விஜயை வழி அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மதுரை விமான நிலையம் சென்ற அவர் சென்னை செல்கிறார். சில நாட்கள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் அரசியலில் விஜய் கவனம் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கோவை பூத் கமிட்டி மாநாட்டை போலவே மதுரையிலும் பிரம்மாண்ட மாநாடு நடைபெற இருக்கிறது. இதற்காக மதுரை கொடைக்கானல் சாலையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இடம் பார்க்கும் பணி நிறைவடைந்திருக்கும் நிலையில் அடுத்ததாக மாநாடு ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர். விரைவில் அதற்கான அறிவிப்பும் இருக்கும் என்கின்றனர். அந்த வகையில் அந்த மாநாட்டில் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பூத் கமிட்டி ஏஜென்ட்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மதுரைக்கு வரும் விஜய்க்கு கோவையில் கொடுத்த வரவேற்பை விட பல மடங்கு அதிக வரவேற்பு கொடுக்க வேண்டும் என நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications