தர்ம தேவனே போற்றி! விஜயகாந்த் நினைவிடத்திற்கு மாலை அணிந்து விரதமிருந்து செல்லும் தொண்டர்கள்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தொண்டர்கள் மாலை அணிந்து கொண்டு விரதமிருந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு செல்கிறார்கள்.
தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் நிமோனியா ஏற்பட்டு மியாட் மருத்துவமனையில் கடந்த ஆண்டு 26 ஆம் தேதி சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மூச்சுவிட சிரமம் இருந்ததை அடுத்து செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டது.

ஆனால் சிகிச்சை பலனின்றி விஜயகாந்த் காலமானார். அவரது உடல் தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்தின் உடலுக்கு லட்சக்கணக்கானோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். பலர் டிவியிலும் சமூகவலைதளங்களிலும் பார்த்தனர்.
இந்த நிலையில் இன்னும் ஏராளமான தொண்டர்கள் விஜயகாந்த் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். பிரேமலதா, அவருடைய மகன்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகளும் அவ்வப்போது விஜயகாந்த் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி அன்னதானமும் செய்து வருகிறார்கள்.
இது விஜயகாந்த் சமாதி அல்ல, கோயிலாக மாற்றுவோம் என பிரேமலதா ஒரு முறை தொண்டர்கள் மத்தியில் பேசியிருந்தார். அதை நிரூபிக்கும் வகையிலும் விஜயகாந்தை வாழும் கடவுளாகவே பார்த்த அவருடைய தொண்டர்கள் தற்போது அவரது நினைவிடத்திற்கு மாலை அணிந்து விரதமிருக்கிறார்கள்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த குண்டாம்பட்டியை சேர்ந்த தேமுதிக தொண்டர்கள் தேமுதிக பேரூர் கழக செயலாளர் சங்கரை குருசாமியாக பாவித்து அவரது முன்னிலையில் 11 பேர் மாலை அணிந்து கொண்டனர். இவர்கள் விரதமிருந்து தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு செல்வார்கள்.
ஏற்கெனவே 10 பேர் மாலை அணிந்து சனிக்கிழமை யாத்திரை செல்கிறார்கள். துளசி மாலையில் எம்ஜிஆர் புகைப்படம் போட்ட டாலர் பொருத்தப்பட்டுள்ளது. மாலை போட்டுக் கொள்ளும் போது தர்ம தேவனே போற்றி என கூறி மாலை அணிந்து கொள்கிறார்கள்.

விஜயகாந்த் நினைவிடத்தில் தினமும் அன்னதானமும் நடைபெறுகிறது. விஜயகாந்த் இல்லாதபட்டவர்களுக்கும் இயலாதோருக்கும் உண்மையில் சாமியாக இருந்தார். அவருடைய திருவுருவப்படத்திற்கு முன்பு மாலை அணிந்து கொள்கிறார்கள்.
விஜயகாந்தை கருப்பு எம்ஜிஆர் என அழைக்கிறார்கள். எம்ஜிஆர் எப்படி இல்லாதவர்களுக்கு உதவிகளை செய்தாரோ, அள்ளி அள்ளி கொடுத்தாரோ அதே போல் விஜயகாந்தும் கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர்.
அவர் இறந்து ஒரு மாதமான நிலையில் சிவன் கோயில்களில் பல பக்தர்கள் மோட்ச தீபம் ஏற்றி வழிபட்டனர். ஒரு மாதமான நிலையிலும் கட்டுக்கடங்காத கூட்டம் தேமுதிக அலுவலகத்திற்கு வந்து கொண்டே இருக்கிறது.












Click it and Unblock the Notifications