பிரதமரின் வாக்குறுதி என்னாச்சு அண்ணாமலை? தமிழர்களை சாதி, மதமாக பிரிக்க முடியாது - அமைச்சர் பெரியசாமி
திண்டுக்கல்: தமிழ்நாடு அரசை குறை சொல்லும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பிரதமர் அளித்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கலில் இலங்கை தமிழர்களுக்கான புதிய வீடுகள் கட்டும் பணியை தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பார்வையிட்டார்.
அத்துடன் வனத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மரக்கன்று நடும் விழாவில் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்ட அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

புலி வருது கதை
அப்போது பேசிய அவர், "தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சுயலாபத்திற்காகவும், மத்திய அரசு தரும் பதவிகளை எதிர்பார்த்தும் தற்போது தமிழ்நாடு அரசு மீது அவதூறாக குற்றம்சாட்டி வருகிறார். அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று அவர் கூறுகிறார். புலி வருது புலி வருது என்று சொல்லி கடைசியில் பூனை கூட வராது.

சாதி, மதத்தால் பிரிக்க முடியாது
தமிழ்நாடு மக்களை யாராலும் ஏமாற்ற முடியாது. சாதி ரீதியாகவும், மத அடிப்படையிலும் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த இயலாது. அண்ணாமலை முதலில் தன்னுடைய முதுகை பார்க்கட்டும். மத்திய அரசு அறிவித்த திட்டங்கள் எதுவும் இந்தியாவில் மக்களுக்கு சென்றடையவில்லை. விவசாயிகளுக்கு வழங்கிய பணத்தைகூட மீண்டும் பிடுங்கியதுதான் மத்திய அரசு.

நீட் தேர்வு
ஒருவர் ஊழல் செய்து இருந்தால் அவரை தண்டிக்க நீதிமன்றம் இருக்கிறது. ஊழல் செய்தவர்கள் மீது காவல் நிலையத்தில் புகாரளித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரட்டும். நீட் தேர்வை ரத்து செய்யுங்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு மட்டும் சொல்லவில்லை. நாடு முழுவதும் உள்ள மாணவர்களின் நலனுக்காக முதலமைச்சர் பேசினார்.

பிரதமரின் வாக்குறுதிகள்
மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட பணிகளுக்கு தமிழ்நாட்டில் எத்தனை பேர் சேர்ந்துள்ளனர்? தமிழகம் முழுவதும் உள்ள மத்திய அரசின் பணிகளில் 15 தமிழர்கள் மட்டுமே பணியில் சேர்ந்துள்ளார்கள். தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடி அளித்த வாக்குகுறுதிகள் தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்டு உள்ளதா என்பதை அண்ணாமலை பார்க்க வேண்டும்." என்றார்.












Click it and Unblock the Notifications