உட்கார்ந்திருக்கிறாரு மோடி - முர்மு நிக்கறாங்க.. இதுதான் பாஜக.. மீண்டும் ரோகிணி: திகைத்த திண்டுக்கல்
திண்டுக்கல்: பாஜக அரசை தொடர்ந்து விமர்சித்து கேள்வி எழுப்பி வரும் நடிகை ரோகிணி, மீண்டும் சரமாரியான கேள்விகளை எழுப்பி வருகிறார்.. இது பாஜகவை மீண்டும் கடுப்பாக்கி வருகிறது.
மணிப்பூர் அன்று பற்றி எரிந்தபோது, நாட்டு மக்கள் மிகுந்த கொதிப்புக்கு ஆளானார்கள்.. அன்றைய தினம், மைத்தேயி - மெய்டெய் மக்கள் நடத்திய பேரணியானது, மோதலாக வெடித்து, 160க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு கூறியிருந்தது.

எத்தனையோ பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகவும், 5,036 தீவைப்பு வழக்குகள் பதிவாகி, 144 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.. 350 சர்ச்களும், 20 கோயில்களும் பிற வழிபாட்டுத்தலங்களும் அடித்து நொறுக்கப்பட்டன.
கொடூரம்: குக்கி மற்றும் ஜோ பழங்குடி சமூகத்தை சேர்ந்த 2 பெண்கள் வன்முறையாளர்களால் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது, ஒட்டுமொத்த கொடூரத்தின் உச்சமாக பார்க்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், பிஷ்னுபூர் மாவட்டத்தில் குக்கி சமூகத்தை சேர்ந்த டேவிட் என்ற இளைஞனின் தலை துண்டிக்கப்பட்டு, அவரது வீட்டு வாசலிலேயே சொருகிவைத்து போனது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மத்திய அரசுக்கு எதிரான கண்டனங்களை, அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும், பிரபலங்களும் கொட்டி தீர்த்த நிலையில், பிரபல நடிகையும், சமூக ஆர்வலருமான ரோகிணியும், பாஜக மீதான தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.
வெட்கக்கேடு: "ஒட்டுமொத்த நாடும் வெட்கப்படவேண்டிய விஷயத்தை பண்ணி வெச்சிருக்காங்க.. ஒரு பெண்ணின் உடலை, இப்படி நிர்வாணமாக்கி ஊர்வலமாக கொண்டுபோய், வன்புணர்வு செய்திருப்பது நமக்கு எல்லாருக்குமே வெட்கக்கேடு.. அதன்மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அதுக்கும் மேல வெட்கக்கேடு. 77 நாட்களுக்கு பிறகுதான், பிரதமர் இதை பற்றி வாய் திறக்கிறார் என்பது, எப்படிப்பட்ட செய்தியை மக்களுக்கு சொல்கிறது என்பதை யோசித்து பார்க்கணும்.
நம்ம சமூகத்துல பெண்ணின் உடல் மேல குடும்ப கௌரவத்தையும் சமூக மரியாதையையும் புகுத்தி வைத்துள்ளதால்தான் இப்படி பண்ணத் தோணுது. அவமான சின்னங்களாக பெண்களின் உடலை உருவாக்கி வைத்திருப்பது நம்ம சமூகம்தான். இதுபோன்ற பார்வை எப்போது கலைகிறதோ அப்போதுதான் பெண்களுக்கு விடுதலை.
ஆவேசம்: இதுபோன்ற குற்றங்கள் நடக்கும்போது உடனடியாக போய் நிற்க வேண்டிய போலீஸே வேடிக்கை பார்த்திருக்காங்க" என்று அந்த பெண் சொல்லியிருக்கு. இது எந்த அளவுக்கு நியாயம் என்பதை பிரதமர் சொல்ல வேண்டியிருக்கு. அந்த மாநிலத்தின் முதல்வர் பதில் சொல்ல வேண்டியிருக்கு" என்று ஆவேசத்துடன் கூறியிருந்த ரோகிணியின் இந்த பேட்டி, சோஷியல் மீடியாவில் வைரலானது..
இந்நிலையில், தற்போது தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், சிபிஎம் கட்சிக்காக வாக்கு சேகரிப்பில் இறங்கியிருக்கிறார் நடிகை ரோகிணி.. திண்டுக்கல் தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளரை ஆதரித்து கொடைக்கானலில் நடிகை ரோகினி பேசியதாவது:
பெண் கல்வி: "மகளிர் உரிமைத் தொகை, இலவச பஸ் பயணம் ஆகியவை காலம் கடந்தும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும். இது போன்ற திட்டங்கள் தமிழகத்தை கடந்தும் பல்வேறு மாநிலங்களில் போற்றப்படுகிறது. குஜராத் மாநிலத்தில் பெண்களுக்கான கல்வி 27 சதவீதம் மட்டுமே உள்ளது. ஆனால் தமிழகத்தில் பல்வேறு சமூக நீதி திட்டங்களால் பெண் கல்வி உயர்ந்து வருகிறது.
பழங்குடியின பெண் என்பதால் குடியரசு தலைவருக்கு பாஜக அரசு தொடர்ந்து அவமதிப்பு செய்து வருகிறது. நாடாளுமன்ற திறப்பு விழாவில் அவருக்கு அழைப்பு இல்லை.
அத்வானி: அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கியபோது அவரை நிற்க வைத்து பிரதமர் மோடி அமர்ந்தபடி உள்ளார். இதுதான் அவர்கள் பெண்களுக்கு அளிக்கும் மரியாதை. கோவிலின் கருவறைக்குள் கூட பெண்கள் வரக்கூடாது. கோவிலை நாங்கள்தான் திறப்போம் என்று பாஜக சொல்வது எந்த விதத்தில் நியாயம்?
மல்யுத்த வீரர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களின்போது நம்முடைய நாட்டுக்காக பதக்கம் பெற்றுத் தந்த வீரர், வீராங்கனைகள் நடுரோட்டில் போராட்டம் நடத்தினர். ஆனால் அவர்களது கோரிக்கைக்கு பிரதமர் மோடி செவி சாய்க்கவில்லை. பாஜக அடக்குமுறைகளை வெளிக் கொண்டு வருபவர்களை கைது செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
வீடியோ: வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளை, தீவிரவாதிகள் போல் நடத்தியது இந்த மத்திய பாஜக அரசுதான்.. அதனால், இதுபோன்ற அரசை மீண்டும் ஆட்சிக்கு வரவிடக்கூடாது" என்றார் ரோகிணி.. இப்படி பாஜகவை கேள்வி மேல் கேள்வி கேட்டுள்ள ரோகிணியின் இந்த பிரச்சார வீடியோவும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications