போதையால் மாறிய பாதை..மனைவியை கொல்லச் சென்ற கணவன்! கத்தியை பிடுங்கி ஒரே குத்து.. திணறிய திண்டுக்கல்
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் குடிபோதையில் வந்ததை தட்டிக் கேட்ட மனைவியை கணவன் கத்தியால் குத்த முயல, வேறு வழியின்றி அதே கத்தியால் கணவனைக் குத்திக் கொலை செய்துள்ளார் மனைவி. போதையில் புத்தி பேதலித்த கணவனும், ஆத்திரம் கண்ணை மறைக்க மனைவியும் மோதிக் கொள்ள இப்போது கொலையாளியான மனைவியோ சிறையில் இருக்கிறார்..
தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே போதையால் பல்வேறு பிரச்சனைகள் வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளின் விற்பனை கோடிகளைத் தாண்டி இருக்கும் நிலையில் சிறு வயது முதல் முதியவர்கள் வரை பலரும் போதை பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர்.

இதனால் குடும்பத்தில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். சம்பாதிக்கும் பணத்தை முழுவதுமாக குடித்துவிட்டு வருவதால் பல குடும்பங்கள் பிரச்சனை சிக்கித் தவிக்கிறது. மேலும் குடித்துவிட்டு வரும் கணவன்கள் மனைவிகளை அடிப்பதும், அவர்கள் கொலையாளிகளாக மாறுவதும் பல நேரங்களில் தமிழகத்தில் நடந்திருக்கிறது.
அப்படி ஒரு சம்பவம் தான் திண்டுக்கல்லில் அரங்கே இருக்கிறது. குடிபோதையில் வந்த கணவன் மனைவியை கொடுமை செய்ய மனைவியோ கணவன் வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை குத்தி கொலை செய்திருக்கிறார்.. என்ன நடந்தது விரிவாக பார்க்கலாம். திண்டுக்கல் மாவட்டம் பழனி சாலையில் உள்ளது முருக பவனம்.

அப்பகுதியில் இந்திரா நகரில் வசித்து வருபவர் 45 வயதான கண்ணன். இவர் அப்பகுதியில் உள்ள ஒர்க் ஷாப் ஒன்றில் பணியாற்றி வந்திருக்கிறார். இவரது மனைவி மோகனா தேவி வீட்டில் அருகே உள்ள பிரபலமான சேமியா கம்பெனி ஒன்றில் பணியாற்றி வருகிறார். இருவருக்கும் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் இவர்களுக்கு நிவேதா, மதன்குமார் ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இருவரும் படித்து வரும் நிலையில் கண்ணன் மது போதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. வீட்டின் அருகிலேயே டாஸ்மாக் வேறு இருக்க வேலை முடிந்தவுடன் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் கண்ணன். மேலும் மது அருந்தி வரும்போது எல்லாம் மனைவியை அடித்து துன்புறுத்துவது தெருவில் ரகளை செய்வது குழந்தைகளுக்கு தொல்லை தருவது என அவரது கொடுமை நடப்பதாகக் கூறுகின்றனர் அப்பகுதி மக்கள்.
இந்நிலையில் நேற்றும் வழக்கம் போல் குடித்து விட்டு வந்த கண்ணன், மோகனா தேவி இடம் ரகளை செய்திருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த கண்ணன் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து மோகனா தேவியை குத்த முயற்சித்துள்ளார். இதனால் பதற்றம் அடைந்த அவர் கண்ணனை தள்ளிவிட்டுள்ளார்.

அப்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. மேலும் தன்னை குத்தி கொலை செய்து விடுவாரோ என அச்சப்பட்ட மோகனா தேவி கண்ணன் வைத்திருந்த கத்தியை எடுத்து அவரது கழுத்து மார்பு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த கண்ணன் சம்பவ இடத்திலே துடிதுடித்து உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக கண்ணனின் சடலத்தை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குடிபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவனை குத்தி கொலை செய்த மோகனா தேவியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications