விர்ர்னு ஏறும்.. "போதை காளானை" தேடி காட்டுக்குள் போன இளைஞர்கள்! கொடைக்கானலில் இரவில் நடந்த விபரீதம்
திண்டுக்கல்: கொடைக்கானலில் போதைக் காளானை தேடி அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்ற இளைஞர்கள், வழிதெரியாமல் காட்டுக்குள் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போதை தந்த கிளர்ச்சியில் பயம் அறியாமல் காட்டுக்குள் சென்ற இளைஞர்கள், சரியான நேரத்தில் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் சிறிது தாமதித்திருந்தால் கூட வன விலங்குகளுக்கு அவர்கள் இரையாகி இருப்பார்கள் எனக் கூறப்படுகிறது.
இதனிடையே, கொடைக்கானலில் விற்கப்படும் இத்தகைய போதைக் காளான்களை தடை செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
தமிழக அரசின் மேஜர் உத்தரவு.. மொத்தமாக மாற்றுங்க.. ஸ்டாலின் போட்ட ஆர்டர்.. ஆஹா ஜாக்பாட்தான்!
இளைஞர்களை இழுக்கும் போதைக் காளான்கள்
சுற்றுலாத் தலமான கொடைக்கானலில் சமீபகாலமாக போதைக் காளான்களின் (magic mushroom) விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது. Psilocybin என்கிற வேதிக்கலவைகள் நிறைந்த இந்தக் காளான்கள் கொடைகானல் வனப்பகுதியில் விளைகின்றன. இந்த காளானை உண்டால் சுமார் 10 மணிநேரத்திற்கும் மேலாக போதை இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்தக் காளான்களை வாங்குவதற்காக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் கொடைக்கானலுக்கு வந்து செல்கின்றனர்.
கேரள இளைஞர்கள்
இதுபோல, கடந்த வாரம் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த 5 இளைஞர்கள் கொடைக்கானல் வந்துள்ளனர். அங்கு ஒரு விடுதியில் தங்கிய அவர்கள், டிசம்பர் 31-ம் தேதியன்று பூண்டி பகுதிக்கு சென்றுள்ளனர். பின்னர் அங்கு விற்பனை செய்யப்பட் போதைக் காளான்களை ரூ.3000 கொடுத்து அவர்கள் வாங்கியுள்ளனர். தொடர்ந்து, விடுதிக்கு வந்து அந்த காளான்களை சாப்பிட்டுள்ளனர். அப்போது அவர்களுக்கு போதை தலைக்கேறியுள்ளது.
அடர்ந்த வனப்பகுதிக்குள்..
10 மணிநேரத்திற்கும் மேலாக போதை மயக்கத்தில் இருந்த அவர்கள், நள்ளிரவு 12 மணிக்கு தெளிந்துள்ளனர். போதை தந்த கிளர்ச்சியால், மீண்டும் அந்தக் காளானை உண்ண வேண்டும் என அவர்களுக்கு தோன்றியுள்ளது. ஆனால், இரவு நேரத்தில் வாங்க முடியாது என்பதால், தாங்களே காட்டுக்குள் சென்று போதைக் காளான்களை பறித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் நள்ளிரவு 1 மணியளவில் காட்டுக்குள் சென்றனர். 5 பேரில் 2 பேர் ஒரு பிரிவாகவும், 3 பேர் ஒரு பிரிவாகவும் சென்றுள்ளனர்.
சிக்கிய இளைஞர்கள்
ஆனால், போதைக் காளான்கள் கிடைக்காததால் 3 இளைஞர்கள் விடுதிக்கு திரும்பினர். ஆனால், அல்தாப் (26), ஆசிப் (23) ஆகியோர் திரும்பி வர வழி தெரியாமல் அடர்ந்த வனப்பகுதிக்குள் மாட்டிக் கொண்டனர். நண்பர்கள் வராததால் பயந்து போன அவர்கள், அக்கம்பக்கத்தினரிடம் விஷயத்தை கூறியுள்ளனர். பின்னர் அனைவரும் காட்டுக்குள் சென்று தேடி பார்த்துள்ளனர். அப்படியும் அவர்கள் கிடைக்கவில்லை. இதன் காரணமாக, போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, தீ தடுப்பு கோடுகள் போடும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களின் சத்தத்தை கேட்டு, காட்டுக்குள் சிக்கியிருந்த 2 இளைஞர்கள் சத்தம் கேட்கும் திசையில் நடந்து சென்று அவர்களை அடைந்தனர். இதையடுத்து, அவர்கள் இருவரையும் மீட்ட பணியாளர்கள் பூண்டி கிராமத்திற்கு அவர்களை அழைத்து வந்தனர். சுமார் 3 நாட்களுக்கு பிறகு அவர்கள் மீட்கப்பட்டனர்.
போலீஸ் நடவடிக்கை இல்லை
இந்நிலையில், அந்த இளைஞர்கள் 5 பேரும் நேற்று கேரளா திரும்பினர். அடர்ந்த வனப்பகுதிக்குள் அனுமதியின்றி சென்றதற்காகவும், போதைக்காளானை பயன்படுத்தியதற்காகவும் அந்த இளைஞர்கள் மீது போலீஸார் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. இது சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், போதைக் காளான்கள் விற்பனையை தடை செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.