மொத்தமாக கோலி கேப்டன்சிக்கு முடிவா? புதிய அணியை களமிறக்கும் பிசிசிஐ.. பல வீரர்களுக்கு டாட்டா!
துபாய்: இந்திய டி 20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து கோலி விலகி உள்ள நிலையில் ஒருநாள் அணியில் இருந்தும் அவரின் கேப்டன்சி பதவி பறிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
Recommended Video
2021 டி 20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி மிக மோசமாக ஆடி ஏமாற்றம் அளித்துள்ளது. வரிசையாக பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக இந்திய அணி படுதோல்வி அடைந்துள்ளது.
இந்திய அணியின் தோல்வி காரணமாக வீரர்கள் மீது பிசிசிஐ அதிகாரிகள் கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. முக்கியமாக பிசிசிஐ தலைவர் கங்குலி, செயலாளர் ஜெ ஷா ஆகியோர் கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

கோலி
முக்கியமாக ஒரு கேப்டனாக கோலி எடுத்த முடிவுகளை பிசிசிஐ விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அணி தேர்வு தொடங்கி வீரர்களை களமிறக்கிய விதம், ஆட்ட வியூகம் உள்ளிட்ட பல விஷயங்களால் கோலி சிக்கலில் இருக்கிறாராம். நல்ல அணி இருந்தும் மீண்டும் இன்னொரு ஐசிசி கோப்பையை வெல்லாமல் கோலி ஏமாற்றம் அளித்துள்ளார்.

நீக்கம்
இதனால் கோலியை இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்தும் நீக்கும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் கூட இருக்கும் பிசிசிஐ கூட்டத்தில் இதை பற்றி முடிவு எடுக்க உள்ளனர். ஏற்கனவே நடந்த ஆன்லைன் ஆலோசனையில் கோலியை ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக பிசிசிஐ தலைவர் கங்குலி, செயலாளர் ஜெ ஷா பேசியதாக தகவல்கள் வருகின்றன.

இரண்டு பேர் வேண்டாம்
ஏற்கனவே கேப்டன் கோலி தனது பதவியை டி 20 தொடரில் ராஜினாமா செய்துவிட்டார். இந்த தொடரில் இந்திய அணி செமி பைனல் செல்லாத பட்சத்தில் இந்த 3 போட்டிகள்தான் டி 20 தொடரில் கோலி கேப்டனாக இருக்கும் கடைசி போட்டிகள் ஆகும். ஆனால் ஒருநாளுக்கு ஒரு கேப்டன், டி 20க்கு ஒரு கேப்டன் என்று இரண்டு வொயிட் பால் கேப்டன் வேண்டாம் என்பதால் ஒருநாள் கேப்டன் பொறுப்பும் ரோஹித் சர்மாவிற்கு வழங்கப்படும் என்கிறார்கள்.

கோலி ஆடுவார்
டெஸ்ட் அணிக்கு மட்டும் கோலி கேப்டனாக இருப்பார் என்கிறார்கள். அதே சமயம் ஒருநாள், டி 20 அணியில் அவர் ஆடுவார். டி 20 அணியில் கோலியின் பார்ம் தொடர்ந்து கண்காணிக்கப்படும். இன்னொரு பக்கம் அணிக்குள் பல புதிய வீரர்கள் வர உள்ளனர் என்றும் கூறப்படுகிறது. நியூசிலாந்து டி 20 தொடர் இன்னும் சில வாரங்களில் நடக்க உள்ளது. இதில் இந்திய அணியில் புதிய வீரர்கள் இடம்பெறுவார்கள்.

புதிய அணி வருகிறது
ருத்துராஜ், வெங்கடேஷ் ஐயர், சாஹல், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங், ரவி பிஸ்னோய் போன்ற பல வீரர்களுக்கு அணிக்குள் வாய்ப்பு கிடைக்க உள்ளதாம். ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார் போன்ற வீரர்களுக்கு மொத்தமாக டாட்டா காட்டப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த டி 20 உலகக் கோப்பை 2022ல் ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ளது.

தயார்
இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் வர உள்ளதால் பல இளம் வீரர்கள் அணிக்குள் வருவார்கள். 2020 உலகக் கோப்பை டி 20 தொடருக்கு இந்திய அணியை தயார் செய்யும் வகையில் ரோஹித் தலைமையில் புதிய அணி உருவாக்கப்பட உள்ளது. ரோஹித் தேர்வு செய்யும் வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்திய அணிக்குள் வரும் நாட்களில் பல மாற்றங்கள் ஏற்படும்.












Click it and Unblock the Notifications