துபாய் உலக எக்ஸ்போ கண்காட்சியில்.. தமிழ்நாட்டின் அரங்கை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
துபாய்: துபாயில் நடைபெற்று வரும் உலக எக்ஸ்போ கண்காட்சியில் தமிழ்நாட்டின் அரங்கை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
துபாயில் உலக எக்ஸ்போ கண்காட்சி கடந்த ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கி வரும் மார்ச் 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
உலக எக்ஸ்போ கண்காட்சியில் இன்று (மார்ச் 25) முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு வாரமாக அனுசரிக்கப்படவுள்ளது.
அதில் தமிழ்நாட்டிற்கான அரங்கைத் திறந்து வைக்க முதல்வர் ஸ்டாலின் நேற்று துபாய் புறப்பட்டுச் சென்றார். இன்றைய தினம் ஐக்கிய அமீரக அமைச்சர்களைச் சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்யச் சாதகமாக உள்ள சூழ்நிலைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் எடுத்துரைத்தார்.

அதைத் தொடர்ந்து துபாய் உலக எக்ஸ்போ கண்காட்சியில் அமைந்துள்ள தமிழ்நாட்டின் அரங்கை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாட்டில் தற்போது உள்ள தொழிற்சாலைகள், உட்கட்டமைப்பு காற்றாலைகள் உட்பட பல்வேறு துறைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் உருவகங்களும் இந்த அரங்கில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
அதாவது தமிழ்நாட்டிற்கான அனைத்து சிறப்புகளையும் ஒரே இடத்தில் அறிந்து கொள்ளும் வகையில் இந்த அரங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. 192 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த உலக எக்ஸ்போ கண்காட்சியை சுமார் 2.50 கோடி பேர் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எக்ஸ்போ அரங்கில் தமிழ்நாட்டின் அரங்கைத் திறந்து வைத்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், அனைத்து வகையான உற்பத்தித் துறைகளிலும் தமிழ்நாடு சிறந்து விளங்குவதாகப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

மேலும், தமிழ்நாட்டின் அரங்கை யார் பார்வையிட்டாலும், தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் சாதித்துள்ள ஒருங்கிணைந்த வளர்ச்சி தெரிந்து கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார் அதைத் தொடர்ந்து அங்கு நடைபெற்ற தமிழ்நாட்டுப் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளையும் அவர் கண்டு களித்தார்.
முன்னதாக எக்ஸ்போவுக்கு முதல்வர் ஸ்டாலின் வந்த போது அவருக்குத் துபாயில் வாழும் அயலக தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இது தொடர்பான படங்கள் இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.












Click it and Unblock the Notifications