ஹசன் அலி மனைவியை கூட மோசமாக விமர்சிக்கும் பாகிஸ்தான் ரசிகர்கள்!இம்ரான் கான் என்ன சொன்னார் தெரியுமா?
துபாய்: டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்து வெளியேறிய பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு அந்த நாட்டு பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் ட்விட்டரில் ஒரு மெசேஜ் ஷேர் செய்துள்ளார்.
லீக் ஆட்டங்களில் தோல்வியே பெறாத பாகிஸ்தான் அணி , அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
அதிலும் குறிப்பாக, 19வது ஓவரில் பாகிஸ்தான் அணி மிகவும் நம்பிக்கொண்டிருந்த வேகப்பந்துவீச்சாளர் ஷஹீன் அப்ரிடி பந்து வீச்சில் தொடர்ந்து 3 சிக்சர்களை விளாசினார் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வேட்.

ஹோம் கிரவுண்ட்
இதன் காரணமாக, ஒரு ஒவர் எஞ்சியிருக்கும் போது ஆஸ்திரேலியா எளிதாக வெற்றி இலக்கை எட்டி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் அணி சமீப காலங்களாக தனது ஹோம் கிரவுண்ட்டாக எமிரேட்ஸ் மைதானங்களை மாற்றி வைத்துள்ளது. இதற்குக் காரணம் அந்த நாட்டுக்கு விளையாடசெல்வதற்கு பல அணிகளும் தயக்கம் காட்டினார். எனவே ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மைதானங்களில் நடைபெற்ற ஆட்டங்களில் பங்கேற்றது அந்த அணி. இது பாகிஸ்தானுக்கு சாதகம். மேலும் எமிரேட்ஸில் அதிகப்படியான ரசிகர்கள் பாகிஸ்தானுக்குத்தான் ஆதரவாக மைதானங்களில் சப்போர்ட் செய்து வந்தனர். கிட்டத்தட்ட சொந்த மண்ணில் ஆடுவது போல பாகிஸ்தானுக்கு சாதகமான அம்சங்களாக இவை இருந்தன.

பெருமிதத்தோடு போன பாகிஸ்தான்
இந்தியா, நியூசிலாந்து உட்பட குரூப்-2 இடம்பெற்றிருந்த அனைத்து அணிகளையும் தோற்கடித்து, தோல்வியே காணாத அணி என்ற பெருமிதத்தோடு, அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் மோதியது பாகிஸ்தான். சாதகமான அம்சங்கள் பல இருந்தும், இந்த முறை அவர்களுக்குத்தான் கோப்பை என்று ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், ஆஸ்திரேலியா பெற்ற வெற்றியால் பாகிஸ்தான் ரசிகர்கள் உடைந்து அழுது விட்டனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண்கள் பெண்கள் என பேதமின்றி அழும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

கிரிக்கெட் வீரர்கள் தேர்வு
உலக கோப்பைக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை தேர்வு செய்ததில் அந்த நாட்டு பிரதமர் இம்ரான் கான் முக்கிய பங்கு வகிப்பதாக கூறினார்கள். அணி வீரர்கள் தேர்வு முதற்கொண்டு பல்வேறு விஷயங்களில் அவர் தலையிட்டது இதற்கு காரணம். இம்ரான் கான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்ரவுண்டராக இருந்தவர். 1992ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை பாகிஸ்தான் வென்றபோது அந்த அணியின் கேப்டன் இம்ரான் கான்தான். இந்த நிலையில்தான் பாகிஸ்தான் தோல்வி அடைந்த பிறகு அவர் எந்த மாதிரி கருத்துக்களை தெரிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

இம்ரான் கான்
ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறுகையில் , பாபர் ஆசம் மற்றும் அவரது அணிக்கு என்னுடைய மெசேஜ் இதுதான். நீங்கள் இப்போது எந்த மாதிரியான மனநிலையில் இருப்பீர்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. நானும் கிரிக்கெட் மைதானத்தில் இந்த மாதிரியான ஏமாற்றங்களை சந்தித்துள்ளேன். ஆனால் நீங்கள் அனைவருமே சிறப்பான தரமான கிரிக்கெட் போட்டியை ஆடியதற்காக பெருமிதம் கொள்ள வேண்டும். வெற்றி பெறும் போது, நீங்கள் பணிவோடு இருந்ததை நினைத்து பார்க்கவே பெருமிதம் கொள்ள வேண்டும். ஆஸ்திரேலிய அணிக்கு எனது வாழ்த்துக்கள்.இவ்வாறு இம்ரான்கான் தெரிவித்துள்ளார் .

ஹசன் அலி மனைவி
இம்ரான்கான் ஒரு முன்னாள் கிரிக்கெட் வீரர் என்பதால் பெருந்தன்மையாக இதுபோன்ற ஒரு மெசேஜை தனது அணியினருக்கு அனுப்பியுள்ளார். ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும்பாலானோர் அந்த நாட்டு வீரர்களை கடுமையாக விமர்சனம் செய்து சமூகவலைத்தளங்களில் பதிவுகளை போட்டு வருகின்றனர். அதிலும் முக்கியமான தருணத்தில் கேட்ச் விட்ட ஹஸன் அலி மீது அவர்கள் கோபம் திரும்பியிருக்கிறது. அவரது மனைவி இந்தியாவைச் சேர்ந்தவர் என்பதால், அவரையும் கூட விட்டு வைக்காமல் விமர்சன கணைகளை பாகிஸ்தான் ரசிகர்கள் வீசி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications