Dubai: துபாய் டூ அபுதாபி.. ஜெட் வேகத்தில் பறக்கலாம்! ஒரு மணி நேரம் கூட ஆகாது.. UAE-இல் நடக்கப்போகும் மேஜிக்
துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் ரயில் சேவையில் புதிய புரட்சி ஏற்பட உள்ளது. இதுவரை சரக்கு போக்குவரத்தை மட்டுமே கையாண்டு வந்த அந்த நாட்டின் தேசிய ரயில் சேவையான எத்திஹாத் ரயில்வே நெட்வொர்க் இந்த ஆண்டு இறுதிக்குள் பயணிகள் ரயில் சேவையை அறிமுகம் செய்ய உள்ளது. மணிக்கு 200 கி.மீ வேகத்தில் செல்லும் திறன் கொண்ட ரயில் சேவை இயக்கப்பட உள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மிக முக்கிய நகரங்களாக துபாய் மற்றும் அபுதாபி உள்ளன. உலகத் தரம் வாய்ந்த கட்டமைப்புகளை கொண்டதாக துபாய் நகரம் இருந்து வருகிறது. துபாய் - அபுதாபி இடையே சுற்றுலா, வர்த்தகம் உள்ளிட்டவற்றிற்காக தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் சென்று வருகிறார்கள்.

துபாய் டூ அபுதாபிக்கு பயணிகள் ரயில்
சுமார் 129 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த நகரங்களுக்கு கார் மற்றும் பேருந்தில் பயணித்தால் குறைந்தது 1.30 மணி நேரம் ஆகிறது. இந்த நிலையில், மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரயில் சேவையை இந்த ஆண்டுக்குள் இரு நகரங்களுக்கு இடையே அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
சரக்குப் போக்குவரத்தில் ஈடுபட்டு வந்த தேசிய ரயில்வேயான எத்திகாத் ரயில் (Etihad Rail), தற்போது நாடு முழுவதும் பயணிகள் சேவைகளைத் தொடங்கத் தயாராகி வருகிறது. அபுதாபி, துபாய், ஷார்ஜா, ஃபுஜைரா உள்ளிட்ட 11 முக்கிய நகரங்களை இந்த ரயில் படிப்படியாக இணைக்கும்.
13 புதிய பயணிகள் ரயில்கள்
நவீன வடிவமைப்புகளுடன் கூடிய வசதியான இருக்கைகள், வைஃபை, தனிப்பட்ட பவர் அவுட்லெட்டுகள் போன்ற பல்வேறு நவீன வசதிகள் ரயில்களில் இடம்பெறும். 13 புதிய ரயில்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுகின்றன. ஒவ்வொன்றும் 400 பயணிகளை ஏற்றிச் செல்லும்.. 2030-க்குள் 3.65 கோடி ஆண்டு பயணிகளை எத்திகாத் ரயில் இலக்கு வைத்துள்ளது.
மணிக்கு சுமார் 200 கி.மீ வேகத்தில் (125 மைல்) இயங்கும் இந்த ரயில்கள், அபுதாபி - துபாய் பயணத்தை 50 நிமிடங்களாகவும், அபுதாபி - ஃபுஜைரா பயணத்தை ஒரு மணி நேரம் 40 நிமிடங்களாகவும் குறைக்கும். தற்போது சாலை வழியாக இந்த இரு நகரங்களுக்கும் செல்ல சுமார் ஒன்றரை மணி நேரம் ஆகும்.
எப்போது சேவை தொடங்கும்?
இது தொடர்பாக எத்திகாத் ரயிலின் தலைமைத் திட்ட அதிகாரியான முகமது அல்ஷெஹி கூறுகையில், "அபுதாபியில் உள்ள முகமது பின் சயீத் சிட்டி, துபாயில் உள்ள ஜுமைரா கோல்ஃப் எஸ்டேட்ஸ், ஷார்ஜாவில் உள்ள பல்கலைக்கழக நகரம், ஃபுஜைராவில் உள்ள அல் ஹிலால் பகுதி போன்ற முக்கியப் பகுதிகளில் இணைக்கும் வகையில் ரயில் நிலையங்கள் கவனமாக தேர்வு செய்யப்பட்டுள்ளன" என்றார்.
எத்திகாத் நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வ தொடக்க தேதியையோ அல்லது டிக்கெட் விற்பனையையோ அறிவிக்கவில்லை என்றாலும், இந்த ஆண்டு செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரக்குப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட்ட இந்த ரயில் தடங்கள், 2016-லிருந்து இயங்கி வருகின்றன. நாட்டின் முதல் பயணிகள் ரயில் சேவையாக இது இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications