100 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கிய துபாய் தொழிலதிபர்... தழைக்கும் மனிதநேயம்..!
துபாய்: தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட துபாய் தொழிலதிபர் லட்சுமணன் என்பவர் தமிழக அரசுக்கு 100 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கியுள்ளார்.
தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்தவர் தொழிலதிபர் லட்சுமணன். இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் கடல்நீரை குடிநீராக மாற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் தாம் பிறந்த தென்காசி மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கும், தமிழகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கும் சத்தமின்றி உதவியும் செய்து வருகிறார்.

இதனிடையே தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை அரசு தீவிரமாக முன்னெடுத்து வரும் சூழலில், அரசு மருத்துவமனைகள் பயன்பாட்டுக்காக 100 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கியுள்ளார் லட்சுமணன். தனது டெக்டான் நிறுவன அதிகாரிகள் சாமுவேல் ஜார்ஜ் மற்றும் தணிகை வேல் ஆகிய இருவர் மூலம் முதலமைச்சரிடம் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கியிருக்கிறார் துபாய் தொழிலதிபர் லட்சுமணன்.

தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லாத வகையில் செயல்பட்டு வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்நிலையில் அவர் முதலமைச்சராக பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு முன்னணி தொழில் நிறுவனத்தினரும், தொழிலதிபர்களும் தாங்களாகவே மனமுவந்து கொரோனா நிவாரண நிதியை மனிதநேயத்துடன் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தமிழக அரசுக்கு 100 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கியமைக்காக ஐக்கிய அரபு அமீரக திமுக சார்பில் அரிகேசவநல்லூர் எஸ்.எஸ்.மீரான் தொழிலதிபர் மற்றும் மற்ற நிர்வாகிகள் ஆகியோர் லட்சுமணனை நேரில் சந்தித்து நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications