அன்பே உன் மரண அமைதி.. ஓடிப்போன காதல் மனைவி - ஓயாமல் கவிதைகளால் புலம்பும் துபாய் மன்னர்
துபாய்: துபாய் மன்னர் ரஷித் அல் மக்தூமின் மனைவி அவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தலைமறைவாக உள்ளதால் மன்னர் கடும் விரக்தியில் கவிதைகளில் புலம்பி வருகிறார்.
துபாய் மன்னர் மன்னர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் (69). இவரது ஆறாவது மனைவி ஹயா பிண்ட் அல் ஹுசைன். ஹயா பின்ட் ஜோர்டான் மன்னரின் சகோதரி ஆவார். துபாய் மன்னர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூமுக்கும், அவரது மனைவி ஹயா பிண்ட் அல் ஹுசைனுக்கும் ஜலிலா (11), சையத் (7) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஹயா பிண்ட் அல் ஹுசைன் மன்னரிடம் விவாகரத்து கோரியுள்ளார். இந்த பிரச்சனை காரணாமாக ஹயா பிண்ட் அல் ஹுசைன் கடந்த மே மாதம் தனது குழந்தைகளுடன் நாட்டை விட்டு சென்றுள்ளார். பின்னர் ஜெர்மனிக்கு சென்று அங்கு தஞ்சமடைய முயன்றபோது அந்நாடு அடைக்கலம் கொடுக்க மறுத்து விட்டது.
ஆனால் ஹயா பிண்ட் அல் ஹுசைன் தப்பித்து செல்ல ஜெர்மன் அதிகாரிகள் உதவியதாக கூறப்படுகிறது. அவர் ஜெர்மனிக்கு சென்றபோது அது குறித்த தகவல் துபாய் மன்னர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூமுக்கு கிடைத்துள்ளது. அவர் தனது மனைவியை மீண்டும் துபாய்க்கு திருப்பி அனுப்புமாறு கேட்டுள்ளார். ஆனால் ஜெர்மன் அதை நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது.ஜெர்மன் அடைக்கலம் கொடுக்காததால் அங்கிருந்து லண்டனுக்கு சென்ற ஹயா இங்கிலாந்து அரசிடம் அடைக்கலம் கோரியுள்ளார்.
மனைவியை பிரிந்த விரக்தியில் உள்ள மன்னர் தனது உணர்வுகளை கவிதைகளாக எழுதி சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். அன்பே, இன்னும் அதிகம் சொல்ல ஏதுமில்லை. உன் மரண அமைதி என்னைத் துன்புறுத்துகிறது என்று பதிவிட்டுள்ளார். இதனையடுத்து பதிவிட்டுள்ள கவிதையில் "இனி உனக்கு என்னிதயத்தில் இடமில்லை" "நீ வாழ்ந்தாலும் இறந்தாலும் எனக்கு கவலை இல்லை" என்றும், எழுதியுள்ளார்.
நீ வாழ்ந்தாய், மரித்தாய் என்று தலைப்பிட்டுள்ள கவிதையில் "நீ நம்பிக்கைத் துரோகி, விலைமதிப்பற்ற நம்பிக்கைக்கு துரோகம் செய்துவிட்டாய். உனது ஆட்டம் வெளியே தெரிந்துவிட்டது. நாம் யாராக இருந்தோம், நீ யாராக இருந்தாய் என்பது முக்கியமல்ல, நீ பொய் சொன்ன நாட்கள் முடிந்துவிட்டன" என்று எழுதியுள்ளார். மன்னர் உருது மொழியில் எழுதியுள்ள இந்த கவிதைகள் உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது.