பள்ளிகள் ரத்து, பங்குச்சந்தைகள் மூடல்.. ஈரானில் வெடித்த மோதலால் ஸ்தம்பித்த துபாய் வாழ்க்கை
துபாய்: ஈரானில் இப்போது வெடித்துள்ள மோதலால் அந்த மத்திய கிழக்கு பிராந்தியம் முழுக்கவே நிலைமை மோசமாகியுள்ளது. குறிப்பாக ஐக்கிய அமீரகத்தில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், துபாய் பங்குச்சந்தையும் கூட இரு நாட்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானைக் குறிவைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தங்களைத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஏற்கனவே கமேனி உயிரிழந்துவிட்ட நிலையில், கடும் ஆத்திரத்தில் இருக்கும் ஈரானும் பதிலடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இஸ்ரேலை மட்டும் குறிவைக்காமல் அங்குள்ள அனைத்து அமெரிக்க முகாம்களைக் குறிவைத்தும் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

பதற்றம்
இதனால் மத்திய கிழக்கு முழுக்கவே பதற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஐக்கிய அமீரக நகரங்கள் மீது ஈரான் தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் அங்குப் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஐக்கிய அமீரகத்தில் பள்ளிகளுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலம் கல்வி கற்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேரடி வகுப்புகள் ரத்து
கல்வி அமைச்சகமும், உயர் கல்வி மற்றும் அறிவியல் ஆராய்ச்சி அமைச்சகமும் இணைந்து இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளன. பாதுகாப்பு நடவடிக்கையாகவும், கல்வியை உறுதி செய்யவும் மார்ச் 2, திங்கட்கிழமை முதல் மார்ச் 4, புதன்கிழமை வரை பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களும் ஆன்லைனில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது..
இந்த உத்தரவின் கீழ், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள், கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் என யாருமே நேரடியாக வரத் தேவையில்லை. ஆன்லைன் மூலமாகவே அவர்கள் தங்கள் பணியைச் செய்யலாம். தற்போதைக்கு நாளை மறுநாள் புதன்கிழமை வரை வகுப்புகள் ஆன்லைன் முறையில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புவிசார் அரசியல் நிலைமையைப் பொறுத்து, தேவையென்றால் ஆன்லைன் வகுப்புகள் நீட்டிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஆன்லைன் கல்வி
கொரோனா காலத்தில் இதுபோலத் தான் ஆன்லைன் முறைக்குக் கல்வி மாற்றப்பட்டது. அப்போதே ஆன்லைன் முறையில் கல்வியை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்தச் சூழலில் தான் இப்போது மீண்டும் ஆன்லைன் மூலம் கல்வி கற்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடும் அறிவிப்புகளை மட்டுமே பின்பற்றுமாறும், சரிபார்க்கப்படாத சமூக வலைத்தள போஸ்ட்களை நம்ப வேண்டாம் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்..
பங்குச்சந்தைகள் மூடல்
அதேபோல இந்த மோதல்களால் துபாய் பங்குச்சந்தைகளும் மூடப்பட்டுள்ளன. இன்றும் நாளையும் துபாய் பங்குச்சந்தைகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள சில முக்கியமான நிறுவனங்கள் துபாய் பங்குச்சந்தையில் தான் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் தான் இரண்டு நாட்கள் துபாய் பங்குச்சந்தைகள் செயல்பாடு என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த போர் வெடித்தது முதலே மத்திய கிழக்கு பங்குச்சந்தைகளில் கடுமையான சரிவு ஏற்பட்டது. தொடக்கத்தில் சவுதி அரேபியாவின் பங்குச்சந்தை 4%க்கும் அதிகமாகச் சரிந்தது.. ஓமன் 3% மற்றும் எகிப்து பங்குச்சந்தை 5.44% சரிந்தது, அதே நேரத்தில் குவைத் தனது பங்குச்சந்தை வர்த்தகத்தை முற்றிலுமாக நிறுத்தியது.
பதற்றம்
இப்படி பள்ளி & கல்லூரிகள் மூடல், பங்குச்சந்தை மூடல் என்று அமீரகத்தில் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மத்திய கிழக்கில் ஒரு இடத்தில் வெடிக்கும் மோதல் அந்த பிராந்தியத்தையே எந்தளவுக்குப் பாதிக்கிறது என்பதையே இது காட்டுவதாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications