துபாயில் நாளை நடைபெறும் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா.. அமீரக திமுக ஏற்பாடு
துபாய்: மறைந்த திமுக முன்னாள் தலைவர் மு. கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை திமுகவினர் தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர். இதற்கிடையே நாளைய தினம் துபாயில் அமீரக திமுக சார்பில் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா நடைபெறுகிறது. இதில் வழக்கறிஞர் ராஜீவ் காந்தி, தொழிலதிபர் சிங்கப்பூர் ராம் வெங்கடரமணன், எழுத்தாளர் ராஜா தமிழ் மாறன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
தமிழ்நாடு முன்னாள் முதல்வரும் திமுக முன்னாள் தலைவருமான மறைந்த மு. கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை திமுகவினர் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

இந்த நூற்றாண்டு தொடக்க விழாவைக் கடந்தாண்டு முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அப்போது அவரது நினைவாகக் கிண்டியில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையைத் திறக்கப்பட்டது. மேலும், கருணாநிதியின் பிறந்த ஊரான திருவாரூரிலும் கலைஞர் கோட்டம் திறந்து வைக்கப்பட்டது.. தொடர்ந்து மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் ஒன்று திறக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாகத் தமிழ்நாடு முழுக்க பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும், கடந்த ஞாயிற்றுக்கிழமை கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவின் ஒரு பகுதியாக 100 ரூபாய் நாணயத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். அப்போது கருணாநிதி ஒரு அரசியல் தலைவர் இல்லை.. அவர் ஒரு தேசிய தலைவர் என்று குறிப்பிட்ட அமைச்சர் ராஜ்நாத் சிங், அனைவரும் எழுந்து நின்று கைதட்ட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இப்போது அமீரக திமுக சார்பில் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா நடைபெறுகிறது. நாளை புதன்கிழமை துபாயில் உள்ள பணியாஸ் ஸ்கொயர் லேண்ட் மார்க் ஹோட்டலில் இந்த நிகழ்ச்சி நாளை மாலை 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இதனைத் தமிழ்நாடு அரசு அயலக தமிழர் நல வாரிய உறுப்பினரும், அமீரக திமுக அமைப்பாளருமான எஸ்எஸ் அமீரன் ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக திமுக மாணவரணி தலைவர் வழக்கறிஞர் ராஜீவ் காந்தி, அயலக தமிழர்கள் நல வாரிய உறுப்பினரும் தொழிலதிபருமான சிங்கப்பூர் ராம் வெங்கடரமணன், எழுத்தாளர் ராஜா தமிழ் மாறன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.












Click it and Unblock the Notifications