சவுதி, UAE, கத்தாரில் இருக்கும் இந்தியர்களால் புது பிரச்சனை.. தங்கம், பெட்ரோலுக்கு அடுத்தது இது!
துபாய்: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு எரிபொருள் சேமிப்பு மற்றும் தங்கம் வாங்குவதை தள்ளிப்போடுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், மத்திய கிழக்கு நெருக்கடி இந்தியப் பொருளாதாரத்துக்கு புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
வளைகுடா நாடுகளில் இருந்து வரும் ரெமிட்டன்ஸ் அதாவது வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்கள் தாய் நாட்டிற்கு அனுப்பும் டாலர் அல்லது பிற நாட்டு நாணய பணம் பெரிய அளவில் குறையும் அபாயம் உருவாகியுள்ளது. இது இந்தியாவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்த உள்ளது.

இந்திய ரெமிட்டன்ஸில் வளைகுடாவின் பங்கு எவ்வளவு?
இந்தியாவுக்கு வரும் மொத்த ரெமிட்டன்ஸ் வருமானம் 2025 நிதியாண்டில் 135.4 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. உலகில் அதிக ரெமிட்டன்ஸ் பெறும் நாடு இந்தியா தான். இதில் வளைகுடா நாடுகளான (GCC) சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தார், ஓமான் ஆகியவற்றில் இருந்து வரும் பணம் மொத்த ரெமிட்டன்ஸ் தொகையில் சுமார் 28 முதல் 30 சதவீதம் வரை உள்ளது. இது தோராயமாக 38 முதல் 40 பில்லியன் டாலர் அளவுக்கு இருக்கும்.
முன்பு வளைகுடா நாடுகளின் பங்கு 40-50 சதவீதமாக இருந்தாலும், அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் இருந்து வரும் பணம் அதிகரித்ததால் இப்போது சற்று குறைந்துள்ளது. இருப்பினும், இந்த 40 பில்லியன் டாலர் இந்தியாவின் தற்போதைய கணக்கு பற்றாக்குறையை சமாளிக்கும் முக்கிய ஆதாரமாக உள்ளது.
இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பில் ரெமிட்டன்ஸ் தொகை மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது.
வளைகுடா நாடுகளில் மோசமான நிலை
மேற்கு ஆசியாவில் தொடரும் அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் மோதல் காரணமாக ஹார்முஸ் நீரிணை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வளைகுடா நாடுகளின் உணவு இறக்குமதியில் 70 சதவீதம் வரை தடை ஏற்பட்டுள்ளது. இந்த நீரிணை வழியாகத்தான் வளைகுடா நாடுகளின் தானிய இறக்குமதியில் பெரும் பகுதி செல்கிறது.
உணவு பொருட்கள் மற்றும் விவசாய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், வளைகுடா நாடுகளின் நிலை மிகவும் மோசமாக பாதிக்க துவங்கியுள்ளது.
எண்ணெய் உற்பத்தியில் பெரும் சரிவு
ஹார்முஸ் நீரிணை தடைபட்டதால் வளைகுடா நாடுகள் எண்ணெய் உற்பத்தியை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சர்வதேச எரிசக்தி அமைப்பின் (IEA) அறிக்கையின்படி, இந்த பகுதியில் எண்ணெய் உற்பத்தி தினசரி குறைந்தது 10 மில்லியன் பேரல் அளவுக்கு குறைந்துள்ளது.
சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஈராக், குவைத் உள்ளிட்ட நாடுகள் தங்கள் உற்பத்தியை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. சேமிப்பு தொட்டிகள் நிரம்பியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சரிவு வளைகுடா நாடுகளின் வருவாயை பெரிதும் பாதிக்கும்.
நீர் விநியோகம்
ஈரான் ட்ரோன்கள் மூலம் குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள நீர் மற்றும் மின்சார உள்கட்டமைப்பின் மீது தாக்குதல் செய்த காரணத்தில் இதில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. சேதம் மிகக் குறைவாகவே இருந்தாலும், வளைகுடா நாடுகள் குடிநீருக்கு சுமார் 90 சதவீதத்தை டெசாலினேஷன் (கடல் நீர் உப்பு நீக்கம்) மூலம் பெற்று வரும் காரணத்தால் இதில் சிறிய பாதிப்பு ஏற்பட்டாலும் பெரும் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகும்.
இந்தியாவுக்கு $30-40 பில்லியன் இழப்பு அபாயம்
இப்படியிருக்கும் நிலையில் வளைகுடா நாடுகளின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டால், அங்கு வேலை செய்யும் இந்தியர்கள் மூலம் தாய் நாட்டிற்கு வரும் ரெமிட்டன்ஸ் வருமானம் பெரிதும் குறையும். வேலை இழப்பு, போரின் காரணமாக வர்த்தக முடக்கம் இதனால் அங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கு சம்பளம் குறைவது, உணவு பொருட்கள் விலை உயர்வால் செலவு அதிகமாவது என பல பிரச்சனைகள் ரெமிட்டன்ஸ் சுற்றி நடக்கிறது.
இதன் மூலம் இந்தியாவுக்கு வரும் ரெமிட்டன்ஸ் பாதிக்கும் அபாயமும் உள்ளது. இது கண்ணுக்கு தெரியாத பெரிய பிரச்சனை இந்திய பொருளாதாரத்திற்கு உள்ளது.












Click it and Unblock the Notifications