ஓவர் நைட்டில் வாழ்க்கையே மாறிடுச்சு! லாட்டரியில் அடித்த 8 கோடி.. கேரள சிவதாசனுக்கு இப்படி ஒரு யோகமா
துபாய்: துபாயில் கேரளாவை சேர்ந்தவருக்கு ரூ.8 கோடியே 70 லட்சம் லாட்டரியில் பரிசு அடித்துள்ளது. என்றாவது ஒரு நாள் அதிர்ஷ்டம் அடிக்கும் என்ற நம்பிக்கையில் கையில் பணம் இருக்கும்போது லாட்டரியை வாங்கி வந்த நபருக்கு திடீரென பணம் கொட்டோ கொட்டு என கொட்டியிருக்கிறது. இதனால் அந்த நபர் எல்லையில்லா மகிழ்ச்சியில் திளைத்துள்ளார்.
ஒரே ஒரு பாட்டில் கோடீஸ்வரர் ஆகிவிட வேண்டும் என்று பலரும் ஆசைப்படுவதுண்டு. ஆனால் கனவில் தான் இப்படி ஒரே நாளில் பணக்காரர் ஆக முடியும் என்பது எல்லாரும் அறிந்ததே. ஆனால் லாட்டரியில் பரிசு அடித்தாலும் ஒரே நாளில் பணக்காரர் ஆக முடியும்.

லாட்டரி பரிசு
லாட்டரியில் ரூ.40 கொடுத்து டிக்கெட் வாங்கும் ஒருவர் மறுநாளே கோடி ரூபாய்க்கு அதிபதியாகிவிடுகிறார். ஆட்டோக்காரர் டூ கோடீஸ்வரர், கூலி தொழிலாளி டூ பணக்காரர் என ஒரே நாளில் இவரது வாழ்க்கை மாறிவிடுகிறது. லாட்டரி வாங்கும் ஒரு கோடி பேரில் ஒருவர் தான் இப்படி பணக்காரர் ஆகிறார். பணக்காரர் ஆக மாறும் ஒருவரை தான் பலரும் பார்க்கிறார்கள்.
அந்த ஒருவரை தவிர மற்ற 99 லட்சத்து 99 ஆயிரத்து 999 பேர் நஷ்டம் அடைகிறார்கள். பணத்தை இழக்கிறார்கள் என்பதை யாரும் பார்ப்பதே கிடையாது. பரிசு அடித்து கோடீஸ்வரர் ஆகும் ஒருவரை மனதில் வைத்து கொண்டு நம்மளுக்கும் பரிசு அடிக்கும் என நினைத்து பேராசையில் லாட்டரியில் பணத்தை கொட்டி பணத்தை இழக்கும் நபர்களும் அதிகம்.
கேரள நபருக்கு ரூ.8 கோடி பரிசு
எப்படி ஆயினும் பணம் கையில் இருக்கும் போது லாட்டரியை வாங்கி வைப்போம், அடித்தால் லக். இல்லாட்டி ரூபாய் போனால் போகட்டும் என்றும் சிலர் வாங்குகிறார்கள். அப்படித்தான் துபாயில் வசித்து வரும் இந்தியர் ஒருவர் நண்பர்களோடு சேர்ந்து வாங்கிய லாட்டரிக்கு இந்திய மதிப்பில் சுமார் 8 கோடியே 70 லட்சம் ரூபாய் பரிசு அடித்துள்ளது. இதனால் அந்த நபர் எல்லையில்லா மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார்.
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் பிரசாத் சிவதாசன். இவர் துபாயில் வசித்து வருகிறார். செவன் சீஸ் டெக்னாலஜிஸில் என்ஜினீயராக பணி புரிந்து வருகிறார். கடந்த 20 ஆண்டுகளாக துபாயில் வேலைபார்த்து வரும் சிவதாசனுக்கு அவ்வப்போது கையில் பணம் இருந்தால் லாட்டரி வாங்கும் பழக்கம் இருந்து இருக்கிறது. தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து லாட்டரி வாங்கியிருக்கிறார்.
246வது இந்தியருக்கு பரிசு
இந்த நிலையில் தான் துபாய் டூட்டி ஃப்ரீ டிராவில் கடந்த பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி 3793 என்ற டிக்கெட் எண்ணில் லாட்டரி வாங்கியிருக்கிறார். இவரது நண்பர்கள் 9 பேருடன் சேர்ந்து இந்த டிக்கெட்டை வாங்கியிருக்கிறார். இந்த நிலையில், துபாய் மில்லினியம் மில்லியனரில் சிவதாசன் வாங்கிய லாட்டரிக்கு ரூ.8 கோடியே 70 லட்சம் பரிசு அடித்துள்ளது. இதனால் சிவதாசன் சந்தோஷத்தின் எல்லைக்கே சென்றிருக்கிறாராம்.
துபாய் டூட்டி ஃப்ரீ டிரா, கடந்த 1999 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை பல இந்தியர்கள் 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத்தொகை கொண்ட மில்லினியம் மில்லியனரில் வெற்றி பெற்று இருக்கிறார்கள். இதில் 246வது நபராக சிவதாசன் வெற்றி பெற்றுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த நிறுவனத்திற்கு எனது நன்றி" என்று தெரிவித்தார்.
பிஎம்டபிள்யூ கார் பரிசு
இதேபோல் மில்லியம் மில்லியனர் டிராவை அடுத்து மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களுக்கான வின்னர்களும் அறிவிக்கப்பட்டனர். இதில் அபுதாபியை சேர்ந்த இந்திய வம்சாவளியான 38 வயது நபர் ஹமீத் என்பவருக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசாக கிடைத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இந்த லாட்டரியை வாங்கி வரும் அவருக்கு இந்த கார் பரிசாக கிடைத்த நிலையில், 10 ஆண்டுகளாக எனக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் என நம்பி வந்தேன். இன்று இது நனவாகியிருக்கிறது" என்றார்.
இதேபோன்று மோட்டார் சைக்கிளுக்கான பரிசிலும் துபாயில் வசிக்கும் 48 வயது இந்தியரான கமல் தஹாசீல் வென்றார். 10 ஆண்டுகளாக இந்த டிக்கெட் வாங்கி வந்த நிலையில், "இன்று எனக்கு மோட்டார் சைக்கிள் பரிசாக கிடைத்துள்ளது. கூடிய விரைவில் எனக்கு முதல் பரிசு அடிக்கும். இது அதற்கான அறிகுறி தான்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications