உலகின் முன்னணி சரக்கு கப்பல் நிறுவனம் வெளியிட்ட அலர்ட்! மொத்த உலகமும் ஸ்தம்பிக்கப்போகுது!
துபாய்: வளைகுடா நாடுகளில் நடந்து வரும் போர் காரணமாக, உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல் போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றான மெர்ஸ்க், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், ஈராக், குவைத், கத்தார், பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்குள்ளும், அங்கிருந்து வெளியேயும், சரக்கு முன்பதிவு ஏற்பதை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக, மெர்ஸ்க் கப்பல் போக்குவரத்து நிறுவனம், சரக்கு முன்பதிவுகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. வளைகுடா நாடுகளில் இருந்து பொருட்களை ஏற்றிச் செல்லும் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவின் துறைமுகங்களுக்கும், மேல் வளைகுடா சந்தைகளுக்கும் இடையிலான கப்பல் வழித்தடங்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.

உலகளாவிய கப்பல் போக்குவரத்து நிறுவனமான A.P. Moller - Maersk, மேற்கு ஆசியாவின் குறிப்பிட்ட சில பகுதிகளில் சில சரக்குகளுக்கான முன்பதிவுகள் மற்றும் அவற்றை ஏற்றிச் செல்லும் சேவைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இப்பிராந்தியத்தில் பாதுகாப்புக் காரணம் தொடர்ந்து மாறிக்கொண்டிருப்பதாலேயே இந்த முடிவை எடுத்திருப்பதாக, நிறுவனம் தெரிவித்துள்ளது.
தங்கள் ஊழியர்களின் பாதுகாப்பு, சரக்குகளின் நம்பகத்தன்மை மற்றும் நிறுவனத்தின் செயல்பாட்டுத் தொடர்ச்சி ஆகியவற்றை உறுதிப்படுத்த, நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போதைய சூழல் மிகவும் நிலையற்றதாகவும், எந்த நேரத்திலும் மாறக்கூடியதாகவும் இருக்கும் என்றும் அந்த அறிவிப்பு எச்சரித்துள்ளது.
ஆபத்து மதிப்பீடு மற்றும் செயல்பாட்டு ஆய்வுக்குப் பிறகு, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், ஈராக், குவைத், கத்தார், பஹ்ரைன், ஜோர்டான் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் குளிரூட்டப்பட்ட, ஆபத்தான அல்லது சிறப்பு சரக்குகளை ஏற்கும் வசதியை நிறுவனம் அடுத்த அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைத்துள்ளது. இருப்பினும், அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் பிற முக்கிய பொருட்களுக்கு இந்தத் தடை பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications