மந்திரக்கணங்கள் நூல் வெளியீடு! துபாயில் குவிந்த மலேசிய எழுத்தாளர்கள்! கவுரவித்த அமீரகத் திமுக!
துபாய்: துபாய் சென்றிருந்த மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தினருக்கு அமீரக திமுக சார்பில் உற்சாகமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது.
அமீரக திமுக பொறுப்பாளர் எஸ்.எஸ்.மீரான் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டு விழாவில், தமிழகத்திலிருந்தும் பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டனர்.
மந்திரகணங்கள் நூலை பிளாக் துலிப் எஹ்யா வெளியிட, சென்னையை சேர்ந்த ரஹ்மத் பப்ளிகேஷன் நிறுவனர் சிங்கை முஸ்தஃபா முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.
இந்த விழாவில் பங்கேற்க வந்த மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தினருக்கு அமீரகத் திமுக சார்பில் பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டது.
நூல் வெளியீட்டு விழாவை அங்குள்ள தமிழ் வானொலியில் பணியாற்றி வரும் ஆர்.ஜே. அஞ்சனா தொகுத்து வழங்கினார்.
இந்நிலையில் சிறப்பு அழைப்பாளர்களாக அபுதாபி இந்திய கலாச்சார அமைப்பு தலைவர் நடராஜன், அல் அய்ன் இந்திய சோசியல் சென்டர் முஸ்தஃபா முபாரக், மலேசிய எழுத்தாளர் சங்க தலைவர் சைமன், அமீரக எழுத்தாளர் மற்றும் வாசக குழும தலைவர் ஆஸிஃப் மீரான், எழுத்தாளர் ஜஸிலா ரியாஸ், பாலாஜி பாஸ்கரன் ஆகியோர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர்.
தமிழுக்கும் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் உறுதுணையாக நிற்பது தான் தங்கள் நோக்கம் எனக் கூறிய அமீரகத் திமுக பொறுப்பாளர் எஸ்.எஸ்.மீரான், அடுத்த மாதம் சென்னையில் நடக்கவிருக்கும் சர்வதேச புத்தக காட்சியில் மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
இதனிடையே தமிழ் மீதும் இலக்கியம் மீதும் உள்ள ஆர்வம் காரணமாக இளமுருகன், கடையநல்லூர் முஸ்தஃபா, பிளாக் துலிப் செந்தில், சரத் பாபு, பருத்தி இக்பால்,ஏஜிஎம் என பலரும் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.