துபாயில் தமிழக மாணவர்கள்.. கண்ணும் கருத்துமாக கவனிக்கும் அமைச்சர் அன்பில் மகேஷ்! மாணவர்கள் ஹேப்பி
துபாய்: அரசுப் பள்ளி மாணவர்கள் கல்விச் சுற்றுலாவுக்குத் துபாய் சென்றுள்ள நிலையில், அங்கு அவர்கள் பல்வேறு இடங்களை ஆர்வமாகச் சுற்றிப் பார்த்து வருகின்றனர்.
மாநிலத்தில் கல்வித் தரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளைத் தமிழக அரசு தொடர்ச்சியாக எடுத்து வருகிறது. குறிப்பாக அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரத்தை உயர்த்த சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தி, அவர்களுக்கு பல்வேறு வாய்ப்புகளைத் தமிழக அரசு ஏற்படுத்தித் தந்து வருகிறது.
அமைச்சர் அன்பில் மகேஷை கவுரவித்த துபாய் இந்திய தூதர்.. அரசு பள்ளி மாணவர்களுக்கு தேநீர் விருந்து..
துபாய் கல்விச் சுற்றுலா
அதன்படி அரசுப் பள்ளி மாணவர்களைக் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது. இதற்காக வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களைத் துபாய்க்குக் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது. வினாடி வினா போட்டிகளில் வென்ற 68 மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் நேற்று கல்விச் சுற்றுலாவுக்குச் சென்றனர். அதே விமானத்தில் அமைச்சர் அன்பில் மகேசும் உடன் சென்றார்.
இந்து கோயில்
துபாயின் ஜெபல் அலி பகுதியில் அமைந்துள்ள பிரம்மாண்டமான இந்து கோயிலை மாணவ மாணவிகள் சுற்றிப் பார்த்தனர். இந்தக் கோயிலைக் கடந்த மாதம் தான் துபாயின் ஒற்றுமை மற்றும் சகிப்புத்தன்மை துறை அமைச்சர் ஷேக் நஹ்யான் பின் முபாரக் திறந்துவைத்தார். 80 ஆயிரம் சதுர அடியில் அமைக்கப்பட்டு உள்ள இந்த இந்து கோயிலில் அனைத்து தரப்பினரும் வந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஒரே கோயிலில் சிவன், கிருஷ்ணர், முருகன் என மொத்த 16 சாமி சிலைகள் உள்ளது.
மருத்துவர்
பொதுவாக வெளிநாடுகளுக்குச் செல்லும் போது, எதாவது உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அதற்கு உரிய மருத்துவரைப் பார்த்து சிகிச்சை பெறுவதே சிரமமாக இருக்கும். இப்போது துபாய் சென்றுள்ள அனைவரும் பள்ளி மாணவர்கள் என்பதால் அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அதைக் கவனிக்க மருத்துவக் குழு ஒன்றை அமைச்சர் அன்பில் மகேஷ் ஏற்பாடு செய்யச் சொன்னார். அதன்படி அமீரக திமுக பொறுப்பாளர் எஸ் எஸ் மீரான் இரு மருத்துவர்களை ஏற்பாடு செய்துள்ளார்.
மாணவர்கள் பாராட்டு
இந்த மருத்துவ குழுவினர் மாணவர்கள் செல்லும் அனைத்து இடங்களிலும் அவர்கள் உடனேயே பயணிக்கின்றனர். இந்தக் கல்விச் சுற்றுலா தங்களுக்குப் பெரிதும் உதவுகிறது என்றும் வெளிநாட்டு கலாசாரம் குறித்துத் தெரிந்து கொள்ள இது உதவுவதாகவும் தெரிவித்தனர். தங்கள் வெளிநாட்டு முதல்முறை வந்துள்ள நிலையில், உடல்நல பாதிப்புகளைக் கவனிக்கப் பெண் மருத்துவர் உள்ளதும் சவுகரியமாக உள்ளதாகத் தெரிவித்தனர்.