மெல்ல குறையும் பதற்றம்.. சவுதியில் திரும்பும் அமைதி! ஈரான் முன்னெடுத்த முக்கிய மூவ்!
ரியாத்: ஈரான் போர் காரணமாக, வளைகுடா நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன. தற்போது போர் நிறுத்தம் சாத்தியமாகியிருப்பதால், வளைகுடா நாடுகள் அமைதிக்கான முயற்சியில் இறங்கியிருக்கின்றன. குறிப்பாக சவுதி வெளியுறவுத்துறை அமைச்சர், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டிருக்கிறார்.
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்தியிருந்தது. இதற்கு பதிலடி கொடுத்த ஈரான், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் இலக்குகளை தாக்கியிருந்தது. இது வளைகுடா நாடுகள் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சர் இளவரசர் ஃபைசல் பின் பர்ஹான், ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சியுடன் தொலைபேசியில் பேசினார். சமீபத்திய மோதல்கள் தொடங்கிய பிறகு, இரு நாடுகளுக்குமிடையே நடந்த முதல் அதிகாரப்பூர்வ தொடர்பு இதுவாகும்.
சவுதி வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த உரையாடலின்போது, பிராந்தியத்தின் தற்போதைய நிலவரங்கள் குறித்து இரு அமைச்சர்களும் விரிவாகப் பேசினர். பதற்றங்களைக் குறைப்பதற்கான வழிகள் மற்றும் பிராந்தியத்தில் பாதுகாப்பு, நிலைத்தன்மையை மீண்டும் கொண்டுவருவது குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.
இந்த இராஜதந்திர நகர்வு, செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்ட தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து வந்துள்ளது. இதற்கு முன்னதாக, இஸ்ரேல்-அமெரிக்க தாக்குதல்களுக்குப் பதிலடி எனக் கூறி, ஈரான் வளைகுடா நாடுகளில் நேரடி ராணுவத் தாக்குதல்களை நடத்தியிருந்தது.
தற்போதைய நல்லுறவுச் சூழலில், தகவல் தொடர்புப் பாதைகளைத் திறப்பதற்கான ஒரு முக்கிய மைல்கல்லாக இந்த தொலைபேசி உரையாடலை பிராந்திய வல்லுநர்கள் பார்க்கின்றனர். கடந்த பல வாரங்களாக கடல்சார் பாதுகாப்பு மற்றும் பிராந்திய உள்கட்டமைப்பைப் பாதித்துள்ள மோதல்கள் மேலும் பரவாமல் தடுக்க இரு அமைச்சகங்களும் தங்களது விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications