2 நாட்களில் இறந்துவிடுவேன்.. துபாயில் தவிக்கும் தமிழக இளைஞர் பரிதாப வீடியோ.. ஓபிஎஸ் தலையிடுவாரா?
துபாய்: துபாயில் மஞ்சள் காமாலையால் உடல்நிலை மோசமடைந்து மருத்துவ உதவி கிடைக்காமல் அவதிப்படும் இளைஞர் வெளியிட்டுள்ள வீடியோ நெஞ்சை கரைய வைப்பதாக உள்ளது.
Recommended Video
தேனி மாவட்டம் போடியை சேர்ந்த இளைஞர் கணேஷ் குமார். இவர் கடந்த ஜனவரி மாதம் துபாய்க்கு வேலை தேடி சென்றார். கொரோனா பரவல் சார்ந்த பொருளாதார பிரச்சினை காரணமாக துபாயில் இவருக்கு வேலை கிடைக்கவில்லை.

எனவே, நண்பர்களுடன் ஒரு அறையில் தங்கியுள்ளார். இந்த நிலையில் கணேஷ்குமாருக்கு, மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டுள்ளது. மருத்துவ உதவி கிடைக்காமல் இருப்பது மட்டுமில்லாமல், புற்றுநோய் அவருக்கு இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களாக எதையுமே சாப்பிட முடியவில்லை, மஞ்சள் காமாலை, கல்லீரல் புற்றுநோயாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். துபாயில் உள்ள இந்திய வெளிநாட்டு தூதரகத்திற்கு சென்று எவ்வளவோ கெஞ்சிப் பார்த்து விட்டேன். ஆனால் இன்னும் நாடு திரும்ப முடியவில்லை .
எப்படியாவது ஊருக்கு கொண்டு சென்று விட்டு விடுங்கள். அங்கே எனது அம்மா என்னை பார்த்துக் கொள்வார். கேரளாவில் விட்டு விட்டாலும் பரவாயில்லை. அங்கேயே இருந்து ஊருக்கு சென்று விடுகிறோம். வயிறு மிகவும் வலிக்கிறது. நீண்ட நேரம் உட்காரக்கூட முடியவில்லை. எப்படியாவது என்னைக் காப்பாற்றுங்கள். இவ்வாறு அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை பார்த்த கணேஷ்குமார் பெற்றோர், தனது மகனுக்கு, மருத்துவ உதவி கிடைக்கும் வழி ஏற்படுத்திக் கொடுங்கள் என்று கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர். கணேஷ்குமார் போடி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கிராமத்தைச் சேர்ந்தவர். எனவே துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இந்த விஷயத்தில் தலையிட்டு உடனடியாக அவரை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications