ஈரான் போர்: குவைத்தில் தமிழர் ஒருவர் பலி.. இந்தியர்களின் மொத்த உயிரிழப்பு 7 ஆக அதிகரிப்பு! ஷாக்
துபாய்: குவைத்தில், ஈரான் நடத்திய தாக்குதலில் தமிழர் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். இதுவரை மொத்தம் 7 இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு, ஈரான் பதில் தாக்குதலை நடத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவுக்கு உதவும் வளைகுடா நாடுகள் மீதும் ஈரான் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில்தான் இந்தியர்கள் உயிரிழந்திருக்கின்றனர்.

குவைத்தின் முக்கிய மின்சாரம் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்த ஈரானிய தாக்குதல்களில், இந்திய தொழிலாளி ஒருவர் பலியாகியுள்ளார். இந்த தகவலை குவைத்தின் மின்சாரம், நீர் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், "குவைத் அரசுக்கு எதிரான ஈரான் ஏவுகணையால் மின்சாரம் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலைய கட்டிடம் தாக்கப்பட்டது. இதில், இந்திய ஒருவர் உயிரிழந்ததுடன், கட்டிடத்திற்கு கணிசமான பொருள் சேதமும் ஏற்பட்டது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் தமிழகத்தின் முதுகுளத்தூர் பகுதியை சேர்ந்த திரு சந்தனச் செல்வம் என்பது தெரிய வந்திருக்கிறது. இது குறித்து குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில், "நேற்று குவைத்தில் உள்ள ஒரு கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், ஓர் இந்தியக் குடிமகன் உயிரிழந்தமைக்கு, குவைத்தில் உள்ள இந்தியத் தூதரகம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. தேவையான அனைத்து ஆதரவையும் உதவியையும் வழங்குவதற்காக, இந்தியத் தூதரகம் குவைத் அதிகாரிகளுடன் மிக நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது" என்று தெரிவித்திருக்கிறது.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இது குறித்து தனது x பக்கத்தில், "குவைத் நாட்டில் பணிபுரிந்து வந்த பரமக்குடியைச் சார்ந்த திரு செல்வம் அவர்கள் ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
திரு.செல்வம் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசுகளைக் கேட்டுக் கொள்கிறேன்" என பதிவிட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications