போரால் துபாயில் உணவு பஞ்சம்? 8 நாட்களுக்கு தேவையான உணவு மட்டுமே இருக்கிறதாம்! அதிர்ச்சி தகவல்
துபாய்: மத்திய கிழக்கில் இஸ்ரேல்- அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் நாளுக்கு நாள் பூதாகரமாக வெடித்து வருகிறது. இதனால் அந்த பிராந்தியம் முழுக்கவே நிலைமை மோசமாக இருக்கிறது. இந்தச் சூழலில் துபாயில் இன்னும் 8 நாட்களுக்குத் தேவையான உணவுகள் மட்டுமே கையிருப்பில் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய கிழக்கில் இப்போது போர் உச்சக்கட்டத்தில் இருக்கிறது. இந்த மோதல் இப்போது 2வது வாரத்தில் நுழைந்துள்ளது. இதற்கிடையே இந்த அமெரிக்கா- இஸ்ரேல் மற்றும் ஈரான் தொடர் மோதல்கள் காரணமாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் கடுமையான உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. குறிப்பாக, துபாய் நகரில் இந்த நெருக்கடி மிக மோசமாக உள்ளது. அங்கு வெறும் எட்டு நாட்களுக்கான தேவையான உணவு மட்டுமே இருப்பு உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முடங்கிய உணவு சப்ளை
இந்த போர் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் கடல்வழிப் போக்குவரத்துப் பாதைகளைப் பாதித்துள்ளது. குறிப்பாக ஹார்முஸ் நீர் வழிப்பாதையை மூடி, வர்த்தகத்தை முடக்கியுள்ளது. இந்தச் சூழலில் தான் துபாய்க்கு உணவு பற்றாக்குறை ஏற்படலாம் என்ற எச்சரிக்கை வந்துள்ளது. கடல்வழி வர்த்தகம் விரைவில் சீரடையாவிட்டால், நிலைமை மேலும் மோசமடையும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
8 நாட்கள்
துபாயில் இன்னும் 10 நாட்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் மட்டுமே இருப்பதாக வல்லுநர் ஸ்டீபன் பால் தெரிவித்துள்ளார். இதை அவர் கடந்த மார்ச் 5ம் தேதி தெரிவித்தார். அதன்படி பார்த்தால்.. தற்போதைய சூழலில் துபாய்க்கு 7 முதல் 8 நாட்களுக்குத் தேவையான உணவு மட்டுமே இருக்கிறது. பிரபல லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கும் இவர், தனது நிறுவனத்தின் விநியோகச் சங்கிலி டேட்டாவை வைத்தே இந்த தகவலைத் தெரிவித்தார். மேலும், நிலைமையை விரைவாக மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
மிக மோசமான பாதிப்பு
ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் பாலைவனமே பெரும்பகுதி உள்ளன. அங்கு விவசாயம் என்பதே கிட்டத்தட்ட இல்லை எனச் சொல்லலாம். இதனால் பெரும்பாலான வளைகுடா நாடுகள் உணவுக்கு இறக்குமதியைப் பெரிதும் சார்ந்துள்ளன. துபாய் உட்படப் பல முக்கிய நகரங்கள் தங்கள் அன்றாட உணவில் கணிசமான பகுதியை வெளிநாடுகளில் இருந்து பெறுகின்றன. வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் 70 சதவீத உணவுப் போக்குவரத்து ஹார்முஸ் நீரிணை வழியாகவே செல்கிறது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பிறகு, ஹார்முஸ் ஜலசந்தி முடங்கியுள்ளது. இதுவே மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெய் இறக்குமதியை மோசமாக மாற்றியுள்ளது.
மோதல்களின் போது நடந்த ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்கள் அப்பகுதியின் விமானப் போக்குவரத்தையும் கணிசமாகப் பாதித்துள்ளன. நேற்று கூட துபாய் சர்வதேச விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் விமானச் சேவை பாதிக்கப்பட்டது. தற்போது துபாய் ஏர்போர்ட்டில் பகுதியளவு விமானச் சேவை தொடங்கப்பட்டாலும் கூட, அங்கு எந்தளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது என்பதையே இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. பிப்ரவரி 28 முதல் மார்ச் 3 வரையிலான காலகட்டத்தில் மத்திய கிழக்கில் விமான சரக்கு வரத்து 22 சதவீதம் குறைந்துள்ளதாக விமானப் போக்குவரத்து பகுப்பாய்வு நிறுவனமான ஏவன் தெரிவித்துள்ளது..
கவலை வேண்டாம்
இப்படி கடல் மற்றும் விமான சரக்கு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் சிக்கல் மோசமாகி இருக்கிறது. இது உணவுப் பொருள் விநியோகத்தைப் பாதித்து, பழங்கள், காய்கறிகள், பால் பொருட்களின் பற்றாக்குறைக்கு வழிவகுத்துள்ளது. அதேநேரம் புதிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டாலும், பொது மக்கள் கவலை கொள்ளத் தேவையில்லை என நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் தானியங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் நீண்ட நாட்கள் கெடாத பிற அத்தியாவசியப் பொருட்களின் கணிசமான இருப்பு உள்ளது. எனவே, புதிய விநியோகம் குறைந்தாலும், மக்களுக்கு உணவு கிடைப்பதில் பெரிய சிக்கல் ஏற்படாது என ஆய்வாளர்கள் உறுதிப்படத் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications