4-வது தொழில் புரட்சியை நோக்கி இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது.. பிரதமர் மோடி பெருமிதம்
அகமதாபாத்: 4-வது தொழில் புரட்சியை நோக்கி இந்தியா மிக வேகமாக முன்னேறி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
மத்திய மாநில அறிவியல் இரண்டு நாள் மாநாடு அகமதாபாதில் உள்ள அறிவியல் நகரில் செப்டம்பர் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இம்மாநாட்டை வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: 21 ஆம் நூற்றாண்டு இந்தியாவின் வளர்ச்சிக்கு எரிசக்தி போல அறிவியல் உள்ளது; ஒவ்வொரு பிராந்தியம் மற்றும் மாநிலத்தின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் சக்தியை அது கொண்டிருக்கிறது. தற்போது நான்காவது தொழில் புரட்சியை நோக்கிய இந்தியா முன்னேறிவரும் நிலையில் இந்தத் துறையோடு தொடர்புடைய இந்திய அறிவியல் மற்றும் மக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. இத்தகைய சூழலில், நிர்வாகம் மற்றும் கொள்கை உருவாக்கத்தில் உள்ளவர்களின் பொறுப்பு கணிசமான அளவு அதிகரித்துள்ளது.

நமது விஞ்ஞானிகள் சாதனை
தீர்வுகள், வளர்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்பின் அடிப்படையாக அறிவியல் உள்ளது. இந்த உத்வேகத்துடன் இன்றைய புதிய இந்தியா ஜெய் ஜவான், ஜெய் கிசான், ஜெய் விஞ்ஞான், ஜெய் அனுசந்தன் (ஆராய்ச்சி) ஆகியவற்றுடன் புதிய இந்தியா முன்னேறி வருகிறது. வரலாற்றிலிருந்து நாம் பாடங்களைக் கற்க வேண்டும். இது மத்திய மாநில அரசுகளுக்கு உதவும். கடந்த நூற்றாண்டின் முதல் 10 ஆண்டுகளை நாம் நினைவில் கொண்டால் இந்தக் காலத்தில்
உலகம் எவ்வாறு பேரழிவு மற்றும் சோகத்தைக் கடந்து சென்றது என்பதை அறிய முடியும். ஆனால் இந்த சகாப்தத்தில் கிழக்கு அல்லது மேற்கு என எதுவாக இருந்தாலும் அனைத்து இடங்களிலும் இருந்த விஞ்ஞானிகள் தங்களின் மகத்தான கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டிருந்தனர். மேற்கத்திய நாடுகளில் ஐன்ஸ்டீன், ஃபெர்மி, மாக்ஸ் பிளாங்க், நீல்ஸ் போர், டெல்சா போன்ற விஞ்ஞானிகள் தங்களின் பரிசோதனைகள் மூலம் உலகத்தை வியப்படையச் செய்தனர். இதே காலத்தில் சி வி ராமன், ஜெக்தீஷ் சந்திர போஸ், சத்யேந்திரநாத் போஸ், மேக்நாத் சாகா, எஸ் சந்திரசேகர் உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் தங்களின் புதிய கண்டுபிடிப்புகளை முன்னிலைக்குக் கொண்டுவந்தனர். நமது விஞ்ஞானிகளின் பணிகளுக்குப் போதிய அங்கீகாரத்தை நாம் வழங்கவில்லை . நமது விஞ்ஞானிகளின் சாதனைகளை நாம் கொண்டாடும் போது, நமது சமூகம் மற்றும் கலாச்சாரத்தின் பகுதியாக அறிவியல் மாறுகிறது.

விஞ்ஞானிகளை கொண்டாடுவோம்
நமது நாட்டு விஞ்ஞானிகளின் சாதனைகளை அனைவரும் கொண்டாட வேண்டும் . நமது விஞ்ஞானிகளைக் கொண்டாடுவதற்கு போதிய காரணங்களை நாட்டுக்கு அவர்கள் தந்துள்ளனர் . அறிவியல் அடிப்படையில் வளர்ச்சி என்ற சிந்தனையுடன் அரசு பணியாற்றி வருகிறது. 2014க்குப் பின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் முதலீடு கணிசமான அளவு அதிகரித்து வருகிறது. அரசின் இந்த முயற்சிகள் காரணமாக இந்தியா தற்போது உலகளாவிய புதிய கண்டுபிடிப்பு குறியீட்டுத் தரவரிசையில் 46-ஆவது இடத்தில் உள்ளது. அதேசமயம் 2015ல் இந்தியா 81 வது இடத்தில் இருந்தது. நாட்டில் ஏராளமான காப்புரிமைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

டிஎன்ஏவில் அறிவியல்
நமது இளம் தலைமுறையின் டிஎன்ஏ-வில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்பு ஆர்வம் உள்ளது. இந்த இளைய தலைமுறைக்கு முழு பலத்துடன் நாம் ஆதரவு தருவது அவசியம். விண்வெளி இயக்கம், தேசிய சூப்பர்கம்ப்யூட்டிங் இயக்கம், செமிகண்டக்டர் இயக்கம், ஹைட்ரஜன் இயக்கம், ட்ரோன் தொழில்நுட்பம் ஆகிய உதாரணங்களை அவர் தந்தார். அதே போல், தாய்மொழியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வியை வழங்குவதன் மூலம் தேசிய கல்விக் கொள்கை இதனை மேலும் ஊக்கப்படுத்துகிறது.

அடுத்த 25 ஆண்டுகள்..
தேசிய அளவில் தற்போதுள்ள பல அறிவியல் கல்வி நிறுவனங்கள், தேசிய பரிசோதனைக் கூடங்கள் ஆகியவற்றின் திறன்களையும் நிபுணத்துவத்தையும் முழு அளவில் மாநிலங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் . அறிவியல் சார்ந்த கல்வி நிறுவனங்கள் மற்றும் நிபுணத்துவத்தின் அதிகபட்ச பயன்பாட்டிற்கு, நமது அறிவியல் தொடர்பான நிறுவனங்கள் தகவல் பகிர்வதில் தயக்கம் காட்டும் மனநிலையில் இருந்து அவற்றை நாம் வெளியே கொண்டுவர வேண்டும் என்றும் அவர் கூறினார். அறிவியல் மேம்பாட்டு நிகழ்வுகளை அடித்தள நிலையில் கொண்டு செல்ல வேண்டும் . அறிவியல் தொழில்நுட்பத் துறையில் எந்த ஒரு வாய்ப்பையும் யாரும் நழுவ விடக்கூடாது. வரும் 25 ஆண்டுகள் இந்தியாவுக்கு முக்கியமானவை. இந்தியாவிற்குப் புதிய அடையாளத்தையும் வலுவையும் பலத்தையும் தீர்மானிப்பதாக இவை இருக்கும். பங்கேற்பாளர்கள் இந்த மாநாட்டில் கற்றுக்கொண்டதை தங்களின் மாநிலங்களுக்கு கொண்டு சென்று தேசக் கட்டமைப்புக்கு பங்களிப்பு செய்ய வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.












Click it and Unblock the Notifications