ஈரோட்டில் பிரபல ஜவுளிக்கடையை மிரள வைத்த மூன்று பெண்கள்.. மொத்தமாக சிக்கியது எப்படி?
ஈரோடு: தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், ஜவுளி கடைகளில், நகைக்கடைகளில், பல்வேறு சூப்பர் மார்க்கெட்டுகளில் கூட்டம் அலைமோதுகிறது. தீபாவளி பண்டிகை வந்தாலே தமிழ்நாட்டில் எல்லா வீடுகளிலும் எல்லோருக்குமே புது துணி எடுப்பது வழக்கம் என்பதால், பல இடங்களில் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி கைவரிசை காட்டிய பெண்களை ஈரோட்டில் போலீசார் கைது செய்தனர்.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஆறு நாட்களே உள்ளது. அதாவது தீபாவளி பண்டிகை வரும் 31-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கு வசதியாக பொது மக்கள் புத்தாடை, வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க ஈரோட்டில் பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள அனைத்து வணிக வீதிகளுக்கும் படையெடுத்து வருகின்றனர்.

இதனால், அந்தப் பகுதிகளில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஜேப்படி, நகைப்பறிப்பு உள்ளிட்ட குற்றச் செயல்களில் கொள்ளையர்கள் ஈடுபட்டுவிடக்கூடாது என்பதற்காக ஈரோடு மாநகர போலீஸார் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
சிசிடிவி கேமராக்கள் பொருத்தியுள்ள போலீசார் கட்டுப்பாட்டு அறையுடன் இணைத்து, திருடர்களை கண்காணிணத்து வருகிறார்கள். இந்நிலையில் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகில் ஒருங்கிணைந்த ஜவுளி வளாகம் அமைந்துள்ளது. இங்கு 240 கடைகள் செயல்பட்டு வருகின்றன.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இங்குள்ள கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிமாக உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இங்கு பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஒரு கடையின் முன்பு இருந்த ஜவுளி பண்டலை 3 பெண்கள் திருடிச்சென்று விட்டார்கள். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, கடையின் உரிமையாளர் ஈரோடு டவுன் போலீசில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், ஜவுளி பண்டலை திருடிச்சென்றது கோபி அருகே உள்ள கணக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த பவித்ரா (வயது 25), கோகிலா (38), சுசீலா (20) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஜவுளி பண்டலும் பறிமுதல் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications