செங்கல்லை தூக்கிட்டு கிளம்பிட்டாரு.. எய்ம்ஸுக்கும் ஈரோடுக்கும் என்ன சம்பந்தம்? நடிகை விந்தியா அட்டாக்!
திமுக ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று நடிகை விந்தியா விமர்சித்துள்ளார்.
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஸ் இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தபோது எய்ம்ஸ் செங்கலை காட்டி பிரச்சாரம் செய்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர் நடிகை விந்தியா பிரச்சாரம் மேற்கொண்டார்.
மதுரையில் கட்டப்படும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கும், ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை எனப் பேசியுள்ளார் அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் விந்தியா.
மேலும், தமிழ்நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு செய்வதாகவும் விமர்சித்துள்ளார் நடிகை விந்தியா.

உதயநிதி - செங்கல் பிரச்சாரம்
எய்ம்ஸ் என்று எழுதப்பட்ட செங்கலை காட்டி ஈரோட்டில் பிரச்சாரம் செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இது தான் அதிமுக - பாஜக கூட்டணி மதுரைக்கு கட்டிக் கொடுத்த எய்ம்ஸ் மருத்துவமனை. ஒரு செங்கல் தான் உள்ளது. மோடி அறிவித்த 3000 கோடி மதிப்பிலான இந்த எய்ம்ஸ் மருத்துவமனையில் இந்த ஒரு செங்கல் தான் உள்ளது என்றார். தொடர்ந்து அதிமுகவை கடுமையாக விமர்சித்த உதயநிதி ஸ்டாலின், சசிகலாவின் காலில் எடப்பாடி பழனிசாமி விழுந்தது தொடர்பான புகைப்படம் உள்ளிட்ட 4 புகைப்படங்களைக் காட்டி பிரச்சாரம் செய்தார்.

விந்தியா பிரச்சாரம்
இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளரும், அதிமுக நட்சத்திர பேச்சாளருமான நடிகை விந்தியா, திமுக அரசை கடுமையாக விமர்சித்துப் பேசினார். கருங்கல்பாளையம் குயிலன்தோப்பு, கிருஷ்ணம்பாளையம், கனிராவுத்தர்குளம் ஆகிய பகுதிகளில் பேசிய நடிகை விந்தியா, உதயநிதி ஸ்டாலினின் செங்கல் பிரச்சாரத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாகப் பேசினார்.

சம்பந்தமே இல்லாம
மேலும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த முறையும் ஒரு செங்கலை தூக்கி கொண்டு வந்து பிரச்சாரம் செய்கிறார். மதுரையில் கட்டப்படும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கும், ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. உதயநிதி ஸ்டாலின், சம்பந்தமே இல்லாமல் செங்கல்லை எடுத்துக்கொண்டு சுற்றுகிறார். அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றால்தான் இந்த அரசை திருத்த முடியும்." என விமர்சித்தார்.

இது அவசியமா?
மேலும் பேசிய விந்தியா, "தமிழ்நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு செய்வது அவசியமா? திருவண்ணாமலையில் ஏ.டி.எம் கொள்ளை, வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த பிரச்சனை, கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் கொலை, கோவை, தென்காசியில் கொலை என சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருந்தது. ஆனால் தற்போது மக்களுக்கு பாதுகாப்பும் இல்லை. நிம்மதியும் இல்லை." என திமுக அரசை விமர்சித்து, அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.












Click it and Unblock the Notifications