முதலில் வந்தாலும் முடிவு சரியில்லையே! சோகமான நாம் தமிழர் வேட்பாளர்.. பாதியில் ஓடிய அதிமுக வேட்பாளர்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்தது.
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதையொட்டி ஓட்டு எண்ணும் மையத்துக்கு இன்று காலையில் முதல் ஆளாக அதிமுக வேட்பாளர் தென்னரசு, நாம் தமிழர் வேட்பாளர் மேனகா ஆகியோர் வந்தனர். ஆனால் துவக்கம் முதலே காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை பெற்றதால் நாம் தமிழர் வேட்பாளர் மேனகா சோகமான நிலையில் அதிமுக வேட்பாளர் தென்னரசு பாதியிலேயே வெளியேறி காரில் புறப்பட்டு சென்றார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு கடந்த 27 ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுக்கள் இன்று காலை 8 மணிக்கு சித்தோடு சித்தோடு ஐஆர்டிடி பொறியியல் கல்லூரியில் வைத்து எண்ணப்பட்டு வருகின்றனர்.
ஓட்டு எண்ணிக்கையானது 16 மேஜைகளில் 15 சுற்றுகளாக இரு அறைகளில் எண்ணப்பட்டு வருகிறது. ஒரு அறையில் 10 மேஜைகளும், இன்னொரு அறையில் 6 மேஜைகளிலும் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி
இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் சுமார் 50 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற உள்ளார். மாலை 4 மணி நிலவரப்படி ஈவிகேஎஸ் இளங்கோவன் 76,301 ஓட்டுகள் பெற்றிருந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தென்னரசு 28,239 ஓட்டுகள் பெற்று டெபாசிட்டை தக்க வைத்தார். நாம் தமிழர் வேட்பாளர் மேனகா 4,062 ஓட்டுகளுடன் 3வது இடத்தில் இருந்த நிலையில் தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 605 ஓட்டுகள் மட்டுமே பெற்று பின்தங்கி இருந்தார். முழுமையான ரிசல்ட் இன்னும் சில மணிநேரங்களில் வர உள்ளது.

முதல் ஆளாக ஆர்வம்
இந்நிலையில் தான் ஓட்டு எண்ணிக்கையை முன்னிட்டு இன்று காலை 7 மணி முதல் ஓட்டு எண்ணும் மையத்துக்குள் முகவர்கள், வேட்பாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். முகவர்கள் அனைவரும் அடையாள அட்டையுடன் கடும் சோதனைகளுக்கு பிறகு வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் வாக்கு எண்ணும் மையத்துக்கு அதிமுக வேட்பாளர் தென்னரசு, நாம் தமிழர் வேட்பாளர் மேனகா ஆகியோர் முதல் ஆளாக ஆர்வமாக வந்தனர்.

சோகமான நாம் தமிழர் வேட்பாளர்
ஆனால் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது முதலே அதிமுக வேட்பாளர் தென்னரசு மற்றும் நாம் தமிழர் வேட்பாளர் மேனகா ஆகியோருக்கு ஷாக் காத்திருந்தது. அதாவது தபால் ஓட்டு முதல் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டு எண்ணிக்கை என அனைத்து சுற்றுகளிலும் ஈவிகேஎஸ் இளங்கோவன் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். இதனால் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா சோகமானார்.

பாதியில் வெளியேறிய அதிமுக வேட்பாளர்
மாறாக அதிமுக வேட்பாளர் தென்னரசு அதிருப்தி அடைந்தார். வாக்கு எண்ணும் மையத்தில் 4வது சுற்று நடந்தபோதே அவர் திடீரென்று வாக்கு எண்ணும் மையத்தை விட்டு வெளியேறி காரில் புறப்பட்டு சென்றார். இந்த வேளையில் பத்திரிகையாளர்கள் அவரிடம் கேட்டபோது, ‛பணநாயகம் ஜெயித்துவிட்டது' எனக்கூறி அங்கிருந்து வேகமாக புறப்பட்டு சென்றார். இந்த சம்பவம் வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாக வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி மொத்தம் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆயுதப்படை உள்பட மொத்தம் 750க்கும் அதிகமான போலீசார் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications