திடீரென மேடையை விட்டு இறங்கிய ‘மாஜி’.. சமாதானம் செய்து அழைத்து வந்த சீனியர்கள்.. ஈபிஎஸ் உடன் உரசல்?
முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்தை ஈபிஎஸ் கண்டு கொள்ளாததால் அவர் மேடையை விட்டு கீழே இறங்கிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டத்தின்போது, எடப்பாடி பழனிசாமி - சி.வி.சண்முகம் இடையேயான அதிருப்தி வெளிப்படையாகத் தெரிந்தது. மேடையில் அமர்ந்திருந்த அணைவருக்கும் வணக்கம் சொன்ன சி.வி.சண்முகம், எடப்பாடி பழனிசாமியை கண்டுகொள்ளாமல் தவிர்த்தார். இது அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அனைவரையும் களத்தில் இறக்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. கடந்த சில நாட்களாக அதிமுகவினர் ஈரோட்டில் முகாமிட்டு அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் சி.வி.சண்முகம் மேடையில் இருந்து கீழே இறங்கியதும், அவரை சீனியர்கள் மீண்டும் அழைத்து வந்ததும் அனைவராலும் கவனிக்கப்பட்டது.

வேட்பாளர் அறிமுக கூட்டம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று வேப்பம்பாளையம் பகுதியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் என பலரும் பங்கேற்றனர்.

மேடையில் 100 பேர்
இந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அமர்ந்திருந்தனர். 3 வரிசைகளில் முக்கிய தலைவர்கள் அமர்ந்திருந்த நிலையில், அதற்குப் பின்னாலும் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் நின்றுகொண்டிருந்தனர். மேடையில் மட்டுமே சுமார் 100 பேர் குழுமி இருந்தனர்.

மேடையில் இருந்து இறங்கிய சிவி சண்முகம்
முன்னாள் அமைச்சரும் ராஜ்யசபா எம்.பியுமான சி.வி.சண்முகம் அதிமுக வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்ட மேடையில் ஏறினார். மேடையின் ஒரு ஓரத்தில் அமர்ந்த அவர் திடீரென மேடையில் இருந்து கீழே இறங்கிச் சென்றார். தன்னை எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கண்டுகொள்ளாததால், கோபத்தில் அவர் இறங்கிச் சென்றதாக கூறப்படுகிறது.

ஈபிஎஸ்ஸை கண்டுகொள்ளாமல்
இதனைக் கவனித்த முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் சி.வி.சண்முகத்தை சமாதானம் செய்து மீண்டும் மேடைக்கு அழைத்து வந்தனர். மேடையில் ஏறிய சி.வி.சண்முகம், அங்கிருந்த முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகளுக்கு வணக்கம் கூறியபடியே சென்றார். அப்போது எடப்பாடி பழனிசாமியை கண்டுகொள்ளாமல் சென்று மேடையின் மற்றொரு ஓரத்தில் பொன்னையன், தனபால் ஆகியோருக்கு இடையே அமர்ந்தார். இந்த நிகழ்வு அங்கிருந்தோர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

எடப்பாடி பேச்சு
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பார்த்துக் கொண்டிருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றி அடுத்த நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை எதிரொலிக்கும். வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசுக்கு இந்த இடைத்தேர்தலில் எச்சரிக்கை மணி அடியுங்கள் எனப் பேசினார்.












Click it and Unblock the Notifications