செங்கோட்டையனுக்கு அதிர்ச்சி கொடுத்த எடப்பாடி.. கோபியில் 75 நிர்வாகிகளை தூக்கிய அதிமுக.. செம ஷாக்
ஈரோடு: அதிமுகவில் மூத்த தலைவராக இருந்த செங்கோட்டையன் சில வாரங்களுக்கு முன்பு தான் தவெகவில் இணைந்து தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பைக் கிளப்பியிருந்தார். இதற்கிடையே செங்கோட்டையனுக்கு செக் வைக்கும் விதமாகக் கோபி தொகுதியில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணைந்தனர். சுமார் 75 நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்த நிலையில், அவர்களை எடப்பாடி நேரடியாக வரவேற்றார்.
தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் ஆரம்பித்துவிட்டன. ஒரு பக்கம் கூட்டணி பேச்சுவார்த்தை, இன்னொரு பக்கம் பிரச்சாரம் என்றே அனைத்து அரசியல் கட்சிகளும் செயல்பட்டு வருகிறது. அதேபோல நிர்வாகிகள் கட்சி மாறும் படங்களும் இப்போது ஆரம்பித்துவிட்டது.

செங்கோட்டையன்
அப்படித் தான் அதிமுகவில் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த செங்கோட்டையன் சில வாரங்களுக்கு முன்பு தவெகவில் ஐக்கியமானார். கடந்த சில காலமாகவே எடப்பாடி பழனிசாமிக்கும் செங்கோட்டையனுக்கும் இடையே மோதல் போக்கே இருந்து வந்தது. செங்கோட்டையன் பொது வெளியிலேயே எடப்பாடிக்கு எதிரான கருத்துகளைக் கூறி வந்தார். மேலும், அதிமுகவில் பிரிந்து சென்றவர்களையும் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். இதையடுத்து அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக எடப்பாடி அறிவித்தார்.
அப்போது செங்கோட்டையன் டிடிவி- ஓபிஎஸ் உடன் இணைவார் அல்லது திமுக பக்கம் போகலாம் எனச் சொல்லப்பட்டது. இருப்பினும், யாரும் எதிர்பார்க்காத வகையில் அவர் தவெகவில் இணைந்தார். விஜய்யை முதல்வராக்கப் போகிறேன் எனச் சொல்லி தவெகவில் கட்சி வேலைகளை அவர் ஆரம்பித்தார்.
கோபி நிர்வாகிகள்
கொங்குப் பகுதியில் அதிமுகவின் கோட்டையாக இருந்த கோபியில் அதிமுக முகமாக இருந்தவர் செங்கோட்டையன். தொகுதி முழுக்கவே செங்கோட்டையனின் செல்வாக்கு இருக்கிறது. அப்படிப்பட்ட நபர் திடீரென தவெகவில் ஐக்கியமானது அங்கு அதிமுகவுக்கு ஒரு வெற்றிடத்தை உருவாக்கியது. செங்கோட்டையன் உடன் கோபி அதிமுக நிர்வாகிகள் பலரும் தவெகவில் இணைந்தது எடப்பாடிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
75 நிர்வாகிகளைத் தூக்கிய எடப்பாடி
இந்தச் சூழலில் தான் எடப்பாடி தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார். இன்றைய தினம் கோபி தொகுதியில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணைந்தனர் உழவர் உழைப்பாளர் கட்சியின் மகுடேஸ்வரன் உள்ளிட்ட 75 நிர்வாகிகள் அதிமுகவில் ஐக்கியமாகினர். அதிமுகவில் இணைந்தவர்களைக் கட்சி துண்டு போர்த்தி எடப்பாடி பழனிசாமி வரவேற்றார்.

இன்றைய தினம் தான் ஈரோட்டில் பிரம்மாண்டமான முறையில் விஜய் பங்கேற்றும் மாநாட்டை செங்கோட்டையன் நடத்திக் காட்டியிருந்தார். கடந்த கால விஜய் பிரச்சாரக் கூட்டங்களைப் போல இல்லாமல்.. சுமுகமாகவே இந்த பொதுக் கூட்டம் நடந்தது. தவெகவில் வந்த பிறகு செங்கோட்டையன் நடத்தும் முதல் மாநாடு இதுவாகும்..
தமிழ்நாடு தேர்தல்
இந்த மாநாட்டைத் தொடர்ந்து முக்கியமான சில அதிமுக தலைவர்கள் தவெக பக்கம் செல்லலாம் எனக் கூறப்பட்டது. இந்தச் சூழலில் தான் செங்கோட்டையனின் தொகுதியிலேயே அவருக்கு ஷாக் கொடுத்து இருக்கிறார் எடப்பாடி! தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் அதிகபட்சம் 4 மாதங்களே இருக்கும் சூழலில், தேர்தல் காலம் நெருங்க நெருங்க இதுபோல பல கட்சித் தாவல்களைப் பார்க்க முடியும். அதில் யார் யார் எந்தக் கட்சிக்குப் போகிறார்கள் என்பது சுவாரசியமாகவே இருக்கப் போகிறது.












Click it and Unblock the Notifications