"மரியாதையே இல்லை”.. செங்கோட்டையன் முன்னிலையில் தாக்கப்பட்ட நிர்வாகி ஆவேசம்! துரத்திய அதிமுகவினர்!
ஈரோடு: "அதிமுகவில் அடிப்படை தொண்டருக்கு மரியாதை இல்லை" என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் தாக்கப்பட்ட அதிமுக நிர்வாகி பிரவீன் ஆதங்கத்துடன் பேட்டி அளித்துள்ளார். அவரை பேட்டி கொடுக்கவிடாமல் சில நிர்வாகிகள் இழுத்துச் சென்றனர்.
ஈரோட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அதிமுகவினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. கூட்டத்திற்கு தன்னை அழைக்கவில்லை என்று அதிமுக நிர்வாகி ஒருவர் செங்கோட்டையனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடந்த மாதம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அந்தியூரில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவை புறக்கணித்தது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்காமல் மாவட்டத்திலேயே நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம், பொதுக் கூட்டம் ஆகியவற்றில் கலந்து கொண்டு வருகிறார் செங்கோட்டையன்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். கூட்டத்தில் செங்கோட்டையன் பேசி முடித்த பிறகு அந்தியூரை சேர்ந்த அதிமுக நிர்வாகி ஒருவர் அதிமுக சார்ந்த கூட்டங்களுக்கு தங்களுக்கு அழைப்பு வருவதில்லை என கூட்டத்தில் இருந்து புகார் தெரிவித்தார்.
அப்போது செங்கோட்டையன் புகார் கூறியவரை மேடைக்கு அழைத்து பேசினார். அந்த நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் அவர் மீது தாக்குதல் நடத்த தொடங்கினர். வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்ட நிலையில் அவரை இழுத்து கீழே தள்ளி நாற்காலிகளை எறிந்து கூட்ட அரங்கை விட்டு வெளியேற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
செங்கோட்டையனிடம் பேச விடாமல் தடுத்து அந்த அதிமுக தொண்டர் வெளியேற்றப்பட்ட நிலையில், அந்த நபர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "அதிமுக இளைஞர் பாசறை அந்தியூர் ஒன்றிய நிர்வாகி நான். 2011 முதல் கட்சியில் இருக்கிறேன். கட்சியில் தொண்டர்களுக்கு மரியாதையே இல்லை. கட்சி அழிந்து கொண்டிருக்கிறது. கேட்டால் அடிக்கிறார்கள்." எனக் கூறினார்.
அப்போது, அந்த நிர்வாகியை விரட்டி வந்த அதிமுக நிர்வாகிகள் சிலர், அவரை செய்தி ஊடகத்திற்கு பேட்டி கொடுக்க விடாமல் தடுத்தனர். அவரை பேச விடாமல் அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications