"பணப்பட்டுவாடா" அந்த இரு வாக்குச்சாவடிகள்.. இந்திய தேர்தல் ஆணையத்தில் திமுக மீது அதிமுக பரபர புகார்!
திமுக பணப்பட்டுவாடா செய்வதாக அதிமுக தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடக்கும் இடையன்காட்டுவலசு பகுதியில் திமுகவினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டு வருவதாக அதிமுக தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் புகாரளிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி எண்.138 மற்றும் 139 ஆகியவற்றில் திமுக வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை புகார் அளித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மறைவைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் காலை முதலே மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். தேர்தலுக்காக அங்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தல் அமைதியான முறையில் நடந்து வருகிறது.

இடைத்தேர்தல் வாக்குப்பதிவு
இதில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதேபோல அதிமுகவில் இருந்து தென்னரசு போட்டியிடுகிறார். மேலும், நாம் தமிழர் கட்சியில் இருந்து மேனகா களமிறங்குகிறார். மற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். இந்த 77 பேரில் யார் தங்கள் தொகுதியின் பிரதிநிதியாக இருப்பார் என்பதைத் தேர்வு செய்ய மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.

மை அழிகிறதா?
இதற்கிடையே இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கிய கொஞ்ச நேரத்தில் அதிமுக சார்பில் பரபர புகார் முன்வைக்கப்பட்டது. அதாவது பொதுவாகத் தேர்தலின் பொது வாக்களித்துவிட்டு வந்த நபர், மீண்டும் கள்ள ஓட்டுப் போடுவதைத் தடுக்க அவர்களின் விரல்களில் மை வைக்கப்படும். இந்த மையை அழிக்கவே முடியாது. ஆனால் ஈரோட்டின் சில வாக்குச்சாவடி மைங்களில் வைக்கப்படும் மை, எண்ணெய் வைத்தாலே அழிவதாக அதிமுக புகாரளித்தது.

அதிமுக புகார்
இதற்கு தேர்தல் அலுவலர் சார்பாக மை அழியவில்லை என்று விளக்கம் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள இரு வாக்குச்சாவடி அருகே திமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதாக அதிமுக தரப்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை அளித்துள்ள புகாரில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் திமுக விதிமீறலில் ஈடுபட்டு வருகிறது.

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா
குறிப்பாக இடையன்காட்டுவலசு பகுதியில் உள்ள வாக்குச்சாவடி எண்.138, 139ல் திமுகவினர் கட்சிக் கொடியுடன் பணப்பட்டுவாடா செய்கின்றனர். அதேபோல் வெளி மாவட்ட திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பாகவும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications