“என்னை சோதிக்காதீங்க.. யாரும் சிக்க வைக்க முடியாது”.. பொதுக்கூட்டத்தில் அனல் கக்கிய செங்கோட்டையன்!
ஈரோடு: "இயக்கம் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். என்னை சோதிக்காதீர்கள்; எத்தனையோ வாய்ப்புகள் வந்தபோதும் கட்சிக்காக பாடுபட்டவன். என்னை யாரும் சிக்க வைக்க முடியாது" என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே இன்று அதிமுக சார்பில் எம்.ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார். இந்த விழா மேடையில் இடம்பெற்றுள்ள பேனரில், திமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி படத்தின் அளவுக்கு சம அளவில் செங்கோட்டையனின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது.

இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய செங்கோட்டையன், "இயக்கம் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். என்னை சோதிக்காதீர்கள்; எத்தனையோ வாய்ப்புகள் வந்தபோதும் கட்சிக்காக பாடுபட்டவன். என்னை யாரும் சிக்க வைக்க முடியாது. முதலில் அதைப் புரிந்து கொள்ளுங்கள்.
நான் எத்தனை ஆண்டுகாலமாக அரசியலில் இருக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும். எத்தனை தலைவர்களைச் சந்தித்துவிட்டு இந்தக் களத்தில் இருக்கிறேன் என்பதும் மக்களுக்குத் தெரியும். ஏதாவது கிடைக்குமா எனத் தேடாதீர்கள், எதுவும் கிடைக்காது.
என்னை சோதிக்காதீர்கள், அதுதான் எனது வேண்டுகோள் நான் செல்கின்ற பாதை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வகுத்த பாதை. அது நமக்கு காட்டியிருக்கும் வழி தெய்வங்களின் வழி. அவர்கள் இருவரும் தான் நமக்கு வழிகாட்டி. அவர்கள் இல்லை என்றால் இன்றைக்கு இந்த இடத்தில் நின்று பேசிக் கொண்டிருக்க முடியாது.
1977 தேர்தலில் கோபியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்திருந்தேன். என்னை சத்தியமங்கலத்தில் நிற்கச் சொன்னார் எம்ஜிஆர். அங்கு காங்கிரஸ் செல்வாக்கு கொண்ட பகுதியாயிற்றே என யோசித்தேன். எம்ஜிஆர் என்ற பெயரைச் சொல் என்றார் தலைவர் எம்ஜிஆர். அவர் சொன்னபடி வெற்றி பெற்றுக் காட்டினோம்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் இல்லாததால்தான் விவசாயிகள் பாராட்டு விழாவில் கலந்துகொள்ளவில்லை. அந்தக் குழுவினர் என்னை வந்து அழைத்தபோது அவர்களிடமும் இதைத்தான் சொன்னேன். நான் புறக்கணிக்கவில்லை, என்னை வாழ வைத்தவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இல்லாததால் தான் நான் கலந்து கொள்ளவில்லை.
ஜெயலலிதா விரலை நீட்டும் போதே, அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொண்டு செயல்பட்டவன் நான். தன்னலம் கருதாமல் செயல்படக்கூடியவன் நான், இயக்கம் ஒன்றே பெரிதென நினைப்பவன். எத்தனையோ வாய்ப்புகள் வந்த போதும் நான் மயங்கவில்லை. என்னைச் சோதிக்காதீர்கள்." எனத் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை செயல்படுத்தியமைக்காக அன்னூர் கஞ்சப்பள்ளியில் கடந்த 9 ஆம் தேதி நடந்த பாராட்டு விழாவை, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணித்தது அதிமுகவுக்குள் பெரும் சலசலப்பை எழுப்பியது.
இந்த பரபரப்பான சூழலில் ஈரோட்டில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டில் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தப்படுவதாக தகவல் பரவியது. அவரது வீட்டில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கூடியிருந்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
ஆனால், தனது வீட்டில் ஆலோசனை கூட்டம் எதுவும் நடத்தப்படவில்லை என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்தார். "என்னை சந்திக்க தினமும் 100 அல்லது 200 நபர்கள் வருவது வாடிக்கை தான். அதற்காக, ஆலோசனை கூட்டம் நடத்துவதாக கூறுவதா? தனியாக எந்த ஆலோசனை கூட்டமும் நடத்தப்படவில்லை" என அவர் விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications