21-வயது ஆகாதவர்களுக்கு மது கொடுக்க கூடாது.. அட்வைஸ் செய்து அனுப்புங்க.. அமைச்சர் முத்துசாமி
ஈரோடு: 21-வயது ஆகாதவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்றும் ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் கூறி திருப்பி அனுப்ப வேண்டும் என்று டாஸ்மாக் அதிகரிகளுக்கு உத்தரவிட்டு இருப்பதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதால் அவரிடம் இருந்த மது விலக்கு மற்றும் ஆயத்த தீர்வை துறை அமைச்சர் முத்துசாமியிடம் ஒப்படைக்கப்பட்டது. முத்துசாமி மது விற்பனை தொடர்பாக பல்வேறு புதிய முடிவுகளை எடுத்து வருகிறார். குறிப்பாக 90 மிலி டெட்ரோ பேக்குகளில் மது விற்பனை செய்வது தொடர்பான ஆய்வும் நடைபெற்று வருகிறது.

அதேபோல், காலை 7 மணி முதல் 9 மணி வரை மதுக்கடையை திறக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வருவதாகவும் இது குறித்து பரிசீலனை நடப்பதாகவும் அமைச்சர் முத்துசாமி கூறியிருந்தார். எனினும், இதற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்த நிலையில் டாஸ்மாக் கடைகள் திறக்கும் நேரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்று அமைச்சர் முத்துசாமி விளக்கம் அளித்து இருந்தார்.
அதேபோல், டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஏராளமான பிரச்னைகள் உள்ளன. அவர்கள் பல சிக்கல்களை சந்திக்கின்றனர். அவற்றுக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். இதனால், டாஸ்மாக் விற்பனையை ஒழுங்குபடுத்துவதிலும் டாஸ்மாக் கடை ஊழியர்கள் நலன் தொடர்பாகவும் பல்வேறு முக்கிய முடிவுகள் வரும் காலத்த்தில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்று ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் முத்துசாமி, 21-வயதுக்கு குறைவான இளைஞர்கள் வந்தால் மது கொடுக்கக்கக்கூடது என்று அறிவுறுத்தியிருப்பதாக தெரிவித்தார். இது தொடர்பாக முத்துசாமி கூறியதாவது:- 21-வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படுகிறது. அதற்கு குறைவான வயதில் உள்ள இளைஞர்கள் வந்தால் மதுவை கொடுக்கக்கூடாது.
உரிய ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் கொடுத்து திருப்பி அனுப்ப வேண்டும் என்று டாஸ்மாக் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறோம். தமிழ்நாடு முழுவதும் போதை மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த மறுவாழ்வு மையங்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய முறையில் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.
பரீட்சார்த்த முறையில் மூன்று மாவட்டங்களில் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து வேன் மூலம் பிரசாரம் மேற்கொள்ளப்படும். குடிப்பவர்களை விமர்சிப்பதற்கு பதில் அவர்களுக்கு ஆலோசனை வழங்குங்கள். கடுமையான பணிச்சூழலில் இருப்பவர்கள் குடிக்கும்போது அவர்களை குடிகாரர்கள் என கூறக்கூடாது. ஜாலிக்காக குடிப்பவர்களை குடிகாரர்கள் என கூறுவதில் தவறில்லை. இவ்வாறு அமைச்சர் முத்துசாமி கூறினார்.












Click it and Unblock the Notifications