"முதல்வரே..! திராவிடம் தலை குனியும் ஆட்சி தான் திராவிட மாடலா!" டிடிவி தினகரன் சரமாரி கேள்வி
ஈரோடு: ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திமுக அரசைக் கடுமையாகச் சாடி பேசினார்.
Recommended Video
ஈரோட்டில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஈரோடு சென்றிருந்தார்.
அக்கட்சியின் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் திமுக அரசை மிக கடுமையாகச் சாடி பேசினார்.
திமுகவில் இணைந்த அமமுக மாவட்டச் செயலாளர்! ஈரோடு மேற்கு மாவட்டத்தில் டிடிவி தினகரன் கூடாரம் காலி!
டிடிவி தினகரன்
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "2021 சட்டமன்ற தேர்தலின் போது அதிமுகவை வீழ்த்தி ஆட்சிக்கு வர வேண்டும் என்ற நோக்கத்திற்காக பல்வேறு பொய்யான வாக்குறுதிகளை திமுக அளித்து. இப்போது ஆட்சிக்கு வந்து ஒரு ஆண்டு ஆகியும் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை ஒன்று கூட நிறைவேற்றாமல் பொய்யான ஆட்சி நடத்தி வருகிறது. தங்களுக்கான நலத் திட்டங்கள் நிறைவேறும் என்கிற எண்ணத்தில் திமுகவை நம்பி வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும் அரசாக இந்த திமுக அரசு இருக்கிறது.
ரூ 1000 திட்டம்
திமுக அளித்த வாக்குறுதிகளில் ஒன்றான பெண்களுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் திட்டத்தை வழங்காமல் ஏமாற்றி வருகின்றனர். திமுகவின் இத்தகைய செயல்பாடு வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக பலத்த வீழ்ச்சியை ஏற்படுத்தும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செல்லுமிடமெல்லாம் திராவிட மாடல் ஆட்சி தமிழகத்தில் நடைபெறுவதாக வீண் தம்பட்டம் அடித்து வருகிறார் .
திராவிட மாடல்
உண்மையில் தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி என்பது திராவிடம் தலை குனியும் ஆட்சியாக நடந்து வருவது வேதனைக்குரிய ஒன்றாக உள்ளது. தமிழகத்தில் எப்போதெல்லாம் திமுக ஆட்சி அமைக்கிறதோ அப்போதெல்லாம் ரவுடிகள் பலர் சுதந்திரமாக உலா வருகின்றனர். அந்த வகையில் தமிழகம் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக திமுகவின் ஓராண்டு ஆட்சி மக்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுக்கும் ஆட்சியாக உள்ளது.
ஆன்லைன் சூதாட்டம்
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்ய வேண்டும்.. எல்கேஜி யுகேஜி வகுப்புகளை அங்கன்வாடி மையங்களில் நடத்துவது தொடர்பான பெற்றோர்களின் கருத்துப்படி சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுகின்ற திமுக அரசு மக்களுக்கு நல்லது செய்கிற அரசாகச் செயல்பட வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.