ஈரோடு தொகுதியில் MP சீட்! பாஜக MLA மருமகன் ஆற்றல் அசோக்குமாரின் டெல்லி கனவு! அதிமுக தாவிய பின்னணி!
ஈரோடு: மொடக்குறிச்சி தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதியின் மருமகன் ஆற்றல் அசோக்குமார் 2 நாட்களுக்கு முன்னர் பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்ததன் பின்னணியில் எம்.பி.சீட் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
பாஜக எம்.எல்.ஏ. சரஸ்வதியின் சம்பந்தி சவுந்தரத்தை பொறுத்தவரை முன்னாள் அதிமுக எம்.பி. என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சவுந்திரத்தின் மகன் தான் ஆற்றல் அசோக்குமார். ஈரோடு மாவட்டத்தில் குறிப்பாக ஈரோடு மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் ஆற்றல் மருத்துவமனை என்ற பெயரில் மருத்துவர்களை ஊதியம் கொடுத்து பணியமர்த்தி 10 ரூபாய்க்கு ஏழை எளியோருக்கு சிகிச்சைகள் வழங்கி வருகிறார். அதுமட்டுமல்ல இன்னும் பல பொது சேவைகளில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார் ஆற்றல் அசோக் குமார். அதுமட்டுமல்ல பள்ளியும் நடத்தி வருகிறார் இவர்.

தனது அம்மா சவுந்தரம் அதிமுக சார்பில் எம்.பி.ஆக இருந்ததை போல் தானும் வரும் தேர்தலில் எம்.பி.யாக ஆக வேண்டும் என விருப்பப்படும் அசோக்குமார் பாஜகவில் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். இதனிடையே அதிமுக பாஜக கூட்டணியில் விரிசல் விழுந்ததால், தேர்தலில் ரிஸ்க் எடுக்க விரும்பாத ஆற்றல் அசோக்குமார் இனியும் பாஜகவில் இருந்தால் வேலைக்கு ஆகாது எனக் கருதி இப்போது அதிமுகவுக்கு தாவிவிட்டார்.
மாமியார் பாஜகவில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். மருமகனோ பாஜகவுக்கு குட் பை சொல்லிவிட்டு எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்திருக்கிறார். இதன் பின்னணியில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக களமிறங்க ஆற்றல் அசோக்குமார் காய் நகர்த்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
செலவு விவகாரத்தை பற்றி கவலைப்படாதவர், அதுமட்டுமல்ல தனது அறக்கட்டளை மூலம் பரவலாக மக்கள் மத்தியில் அறிமுகம் என பல ப்ளஸ் பாயிண்ட்கள் ஆற்றல் அசோக்குமாருக்கு இருந்தாலும் விளம்பர விரும்பி எனவும் விமர்சிக்கிறார்கள் லோக்கல் நிர்வாகிகளே. இதனிடையே வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுகவே நேரடியாக களமிறங்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications