உள்ளே ஓடிய உதயநிதி படம்.. ஈரோடு கிழக்கில் திமுக கூட்டணியே வெல்லும்.. அடித்து சொல்லும் பாஜக நயினார்!
ஈரோடு கிழக்கு தேர்தல் திருமங்கலத்தை விட மோசமாக இருந்தது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலுக்கு இன்று தேர்தல் நடந்து வரும் நிலையில் ஈரோடு கிழக்கில் திமுகதான் வெல்லும் என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: மதியம் 1 மணி நிலவரப்படி 44.56 % வாக்குப்பதிவு நடந்துள்ளது.
இதுவரை 1,01,392 பேர் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இந்த தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர். திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இன்னொரு பக்கம் ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் கே.எஸ் தென்னரசு அங்கு போட்டியிடுகிறார். மேலும் நாம் தமிழர், தேமுதிக ஆகிய கட்சிகளும் களத்தில் உள்ளன.

ஈரோடு கிழக்கு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடவில்லை. அதிமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளருக்கு பாஜக ஆதரவு அளித்துள்ளது. ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலுக்கு இன்று தேர்தல் நடந்து வரும் நிலையில் ஈரோடு கிழக்கில் திமுகதான் வெல்லும் என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், ஈரோடு கிழக்கு தேர்தல் திருமங்கலத்தை விட மோசமாக இருந்தது. திருமங்கலம் பார்முலா என்பதை விட மிக மோசமாக ஈரோடு கிழக்கு இருந்தது . நாம் எல்லாம் திருமங்கலம் பார்முலா என்றுதான் இத்தனை காலம் பேசி வந்தோம். அது எல்லாம் சிறியது என்பதை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நிரூபித்துவிட்டது. திருமங்கலத்தை விட ஈரோடு கிழக்கில் 20 மடங்கு காசு விளையாடி இருக்கிறது.

திமுக மோசம்
ஜனநாயகத்திற்கு விரோதமாக இங்கே திமுக செயல்பட்டு உள்ளது. இவ்வளவு காலம் திருமங்கலம்தான் பெரிது என்று நினைத்தோம் ஆனால் ஈரோடு இதை மிஞ்சிவிட்டது. ஒவ்வொரு வாக்காளரையும் தினமும் சந்தித்து காசு கொடுத்து உள்ளனர். வாக்காளர்களை மண்டபத்தில் அடைத்து வைத்து உணவு போட்டுள்ளனர். தினமும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் படம் போட்டு காட்டி உள்ளனர். அறையில் எப்போதும் உதயநிதி படமே ஓடுகிறது. மாலையில் திரும்பி செல்கையில் பணம் கொடுத்து அனுப்பி உள்ளனர். 1000 ரூபாய் கொடுத்து இவர்கள் அனுப்பப்பட்டனர். அந்த அளவிற்கு அங்கே காசு விளையாடி உள்ளனர்.

யார் இவர்கள்?
இவர்கள் தினமும் மக்களுக்கு காசு கொடுத்துள்ளனர். காசு கொடுத்து இவர்கள் இப்படி எம்எல்ஏ சீட்டை பெற்றுள்ளனர். பாஜக யாரையும் காசு கொடுத்து கவிழ்க்கவில்லை ( ஆபரேஷன் கமலா குறித்த கேள்விக்கு பதில் அளிக்கிறார்) நாங்கள் காசு கொடுத்து எம்எல்ஏக்களை வாங்கினோம் என்று சொல்வது தவறு. அப்படி வைக்கப்படும் புகார்கள் பொய்யானது. பிற மாநிலங்களில் எம்எல்ஏக்கள் எங்கள் கட்சிக்கு வர காரணம், எதிர்க்கட்சியில் இருக்கும் உட்கட்சி மோதல்தான்.

ஆளும் கட்சி
தமிழ்நாட்டில் ஆளும் கட்சியில் அப்படி எதுவும் இதுவரை இல்லை. இனி நடக்குமா என்று பார்க்கலாம். ஈரோடு கிழக்கில் தேர்தல் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. மதுரை கிழக்கு, மருங்கைக்குடி தேர்தலை தவிர மற்ற தேர்தலில் எல்லாம் ஆளும் கட்சிதான் வென்றது. ஆளும் கட்சியே வெல்லும். அதுவே இங்கு நடக்கும். தேர்தல் தோல்வி பயம் காரணமாகவே திமுக பணம் கொடுத்து வருகிறது. ஆளும் கட்சிதான் அதிகமாக பணம் கொடுக்கும். எதிர்க்கட்சியை இவர்கள் பணம் கொடுக்கவே விட மாட்டார்கள். அதனால் திமுகவிற்குதான் ஈரோடு கிழக்கில் வெற்றி, என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications