மூச்சு திணறிய குழந்தை.. ஆம்புலன்சுக்கு வழிவிடாத கார் ஓனர்.. ஈரோடு அருகே பரபரப்பு! போட்டாச்சு அபராதம்
ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிடாமல் சென்ற கார் உரிமையாளர் மன்னிப்பு கோரியுள்ளார்.
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட மூன்று மாத குழந்தையை ஏற்றிக்கொண்டு அவசர சிகிச்சைக்காக கோவை சென்ற ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல் சென்ற கார் உரிமையாளர் மன்னிப்பு கோரியுள்ளார். அதேபோல் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிடாமல் சென்றதற்காக, அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் மூலம் சாலைகளில் பயணிக்கும் போது, ஆம்புலன்ஸ் அல்லது தீயணைப்பு வாகனங்கள் சைரனுடம் வரும் போது பலரும் வழி கொடுப்பர். இது மனிதர்கள் காட்டும் குறைந்தபட்ச சமூக ஒழுக்கமாக பார்க்கப்படுகிறது.
ஆனால் இன்னும் சிலர் ஆன்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கு வழி கொடுக்காமல், சாலையின் நடுவே பயணிப்பர். அதேபோல் ஆம்புலன்ஸ் முன்பாகவோ அல்லது ஆம்புலன்ஸ் பின்னாலோ சென்றால், விரைவாக தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியும் என்ற குறுகிய மனப்பான்மையை இளைஞர்கள் மத்தியில் பார்க்க முடியும்.

ஆம்புலன்ஸ் வாகனம்
இவ்வாறு பயணிப்பதன் மூலம் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக அண்மையில் தமிழ்நாடு அரசு, ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு வழி கொடுக்காமல் பயணிப்போருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த கொத்தமங்கலத்தில் மூச்சுத் திணறல் பாதிக்கப்பட்ட 3 மாத குழந்தை அவசர சிகிச்சைக்காக சத்தியமங்கலத்தில் இருந்து புன்செய்புளியம்பட்டி வழியாக கோவையில் உள்ள மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டது.

இன்னோவா கார்
நல்லூா் சாலையில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற இன்னோவா காா் வழிவிடாமல் தொடர்ந்து சென்று கொண்டிருந்தது. குழந்தையின் உயிரை காப்பதற்காக விரைந்து செல்ல வேண்டும் என்ற காரணத்தால், ஓட்டுநா் சைரன் எழுப்பியுள்ளார். இருந்தும் இன்னோவா காா் ஓட்டுநா் கண்டு கொள்ளாமல் தொடா்ந்து வழிவிடாமல் வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார்.

சமூக வலைதள வீடியோ
இதனை ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவ உதவியாளா் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டாா். இதனை பார்த்த பலரும் ஆம்புலன்ஸிற்கு வழிவிடாமல் சென்ற கார் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சமூக வலைதளங்கள் மூலம் அமைச்சர்களை டேக் செய்து வலியுறுத்தினர்.

கார் உரிமையாளர் யார்?
அதேபோல் இந்த விவகாரம் தொடர்பாக சத்தியமங்கலம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆம்புலன்ஸ் உரிமையாளா் கதிா் புகாா் அளித்தாா். அதன்பேரில் சம்பந்தப்பட்ட காா் பதிவு எண்ணை வைத்து விசாரித்தபோது, காரை ஓட்டிச் சென்றவர் கோவை கரும்புக்கடையைச் சோ்ந்த சுலைமான் என்பது தெரியவந்தது.

மன்னிப்பு
இதையடுத்து உயிா் காக்கும் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிடாத காா் ஓட்டுநா் சுலைமானுக்கு ரூ.10 அபராதம் விதித்து கோபி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் முனுசாமி உத்தரவிட்டாா். இதன் பின்னர் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிடாமல் சென்றதற்கு சுலைமான் மன்னிப்பு கோரினார். அதன் பின்னர் அபராதத் தொகையை செலுத்தினாா்.












Click it and Unblock the Notifications