இரண்டு நாள் மழைக்கே தாக்குப்பிடிக்கவில்லை.. உடைந்த புதிய தடுப்பணை.. ஈரோட்டில் பரபரப்பு
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் இரண்டே நாள் பெய்த மழைக்கே புதிதாக கட்டப்பட்ட தடுப்பணை தாக்குப்பிடிக்க முடியாமல் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரமாகவே நல்ல மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்வதால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் உள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல பகுதிகள் மழை வெள்ளத்தால் சூழப்பட்டிருக்கின்றன.

இதனிடையே, ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக பரலவாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள நீரோடைகள் மற்றும் காட்டாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதில் மாக்காம்பாளையம் பகுதியில் கடந்த ஆண்டு கட்டப்பட்ட தடுப்பணையிலும் இரு தினங்களாக வெள்ளம் ஏற்பட்டது.
இந்நிலையில், இன்று காலை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் புதிய தடுப்பணை உடைந்து நொறுங்கி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. கூத்தம்பாளையம் ஊராட்சி சார்பில் ஓராண்டுக்கு முன்பு அமைக்கப்பட்ட புதிய தடுப்பணை இரண்டே நாள் மழைக்கு கூட தாக்குப்பிடிக்க முடியாமல் நொறுங்கிய சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடையச் செய்தது. எப்படிப்பட்ட தரத்தில் தடுப்பணை கட்டப்பட்டிருந்தால், இரண்டு நாள் மழைக்கே அது உடைந்து போயிருக்கும் என மக்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
மேலும், இந்த புதிய தடுப்பணை வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
மேட்டூர், பவானிசாகர், வைகை போன்ற அணைகள் பல ஆண்டுகளை கடந்தும், பல மழை வெள்ளங்களை பார்த்தும் இன்று வரை கம்பீரமாக நிற்கின்றன. ஆனால் தமிழகத்தில் தற்போது அமைக்கப்படும் சில தடுப்பணைகள் ஒரு சில நாட்கள் பெய்யும் மழைக்கே தாக்குப்பிடிக்க முடியாமல் உடைந்து போவதை பார்க்க முடிகிறது. மக்கள் வரிப் பணத்தில், மக்களின் பாதுகாப்புக்காக கட்டப்படும் இந்த தடுப்பணைகள் தரமானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது என்பதையே இந்த சம்பவங்கள் அவ்வப்போது நினைவூட்டுகின்றன.
இதேபோல, விழுப்புரம், கடலூர் மாவட்ட எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் தளவானூர், எனதிரிமங்கலம் இடையேயுள்ள தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.25.37 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை 2020-ம் ஆண்டு அக்டோபரில் கட்டி முடிக்கப்பட்டது. 400 மீட்டர் நீளமும், 3.1 மீட்டர் உயரமும் கொண்ட இந்த அணையை அப்போதைய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்துவைத்தார். அந்த அணைதான் கடந்த ஜனவரி மாதம் 23-ம் தேதி திடீரென உடைந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கட்டி முடிக்கப்பட்ட சில மாதங்களிலேயே தடுப்பணை உடைந்த காட்சியைக் கண்டு தமிழகமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications