பெருந்துறை: கால்வாயில் குளித்த தலித் மாணவர்கள் மீது தாக்குதல்- அரை நிர்வாணமாக்கி உதைத்த கொடூரம்!
ஈரோடு: பெருந்துறை அருகே கால்வாயில் குளித்த தலித் மாணவர்கள் மீது மற்றொரு சமூகத்தினர் கொடூரமாகத் தாக்குதல் நடத்தி உள்ளனர். மேலும் மாணவர்களை அரை நிர்வாணமாக்கி உதைத்த அட்டூழியமும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக ஈரோடு மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் பி.பி. பழனிச்சாமி கூறியதாவது: ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகா காஞ்சிக்கோயில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கண்ண வேலம்பாளையம் என்ற பகுதியில் வழக்கமாக வாய்க்காலில் தலித் மாணவர்கள் மதிவாணன் (17) தேவேந்திரன்(17) நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது உங்களுக்கு எல்லாம் இங்க என்னடா குளியல் கேட்குது என்று சொல்லி பிரகாஷ் என்பவர், வாய்க்காலில் இருந்து அவர்களை வெளியேற்றி இருக்கிறார்.
மேலும் அந்த மாணவர்களை அரை நிர்வாணமாக ஜட்டியுடன் நிற்க வைத்து டிராக்டரில் கட்டி வைத்திருந்த கயிற்றை எடுத்து பலமாக அடித்து ஒரு மணிநேரம் பொதுவெளியில் ஜட்டியுடன் நிற்க வைத்து அவமானப்படுத்தி சித்திரவதை செய்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவர்கள் பெருந்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின மாவட்ட செயலாளர் பி. பழனிசாமி, துணை செயலாளர் என்.பாலசுப்பிரமணி, அனைத்திந்திய ஐனநாயக மாதர் சங்க மாவட்ட தலைவர் பி.லலிதா, இந்திய ஐனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் விஸ்வநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெருந்துறை தாலுகா செயலாளர் முத்து பழனிசாமி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி பெருந்துறை தாலுகா தலைவர் சுந்தரவடிவேலு, செயலாளர் கே ரவி மற்றும் பிரபு ஆகியோர் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் விவரங்களை கேட்டறிந்து,ஆறுதல் தெரிவித்தனர். தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஜாதிய ரீதியாக மாணவர்களை இழிவுபடுத்தி தாக்கிய பிரகாஷ் என்பவரை கைது செய்ய வேண்டும் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கும் புகார் மனு கொடுத்திருக்கின்றனர். தலித் மாணவர்கள் மீதான இத்தகைய கொடூரத் தாக்குதல் பெருந்துறை பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.