மார்ச் 1 ஸ்டாலின் 70வது பிறந்தநாள்! ''தமிழர்கள் ஏற்றம் பெற்ற நாளாக'' கொண்டாட திமுக மாணவரணி முடிவு!
மார்ச் 1 ஸ்டாலின் 70வது பிறந்தநாள்; தமிழர்கள் ஏற்றம் பெற்ற நாளாக கொண்டாட திமுக மாணவரணி திட்டம்.
ஈரோடு: திமுக தலைவரும், முதலமைச்சருமான முக ஸ்டாலினின் 70வது பிறந்தநாளான மார்ச் 1ஆம் தேதியை தமிழர்கள் ஏற்றம் பெற்ற நாளாக கொண்டாட திமுக மாணவரணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
ஈரோட்டில் நடைபெற்ற திமுக மாணவரணி நிர்வாகிகள் கூட்டத்தில் ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை எந்தெந்த வகைகளில் கொண்டாடுவது என பெரிய டிஸ்கஷன் ஒன்றே நடந்துள்ளது.
இது தொடர்பாக திமுக மாணவரணி விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

ஸ்டாலின் 70வது பிறந்தநாள்
முதலமைச்சர் ஸ்டாலின் 70-வது பிறந்த நாள் விழாவினை "இளைஞர் எழுச்சி நாள்" என்று மட்டுமில்லாமல், தமிழர்கள் ஏற்றம் பெற்ற நாளாகவும், எழுச்சி பெறுகின்ற நன்னாளாய் கொண்டாடவும், மக்களுக்குப் பயனுள்ளதாக கொண்டாடிடும் வகையில், கழக மாணவர் அணி சார்பில் கழக இரு வண்ண கொடியேற்றி, எளியோர்களுக்குப் பசியாற்றும் முகாம்கள், வேட்டி, சேலை வழங்குதல், மாணவர்களுக்கு இலவச நோட்டு, புத்தகங்கள், கல்வித் தொகை வழங்குதல் உள்ளிட்ட உதவி செய்தல், விளையாட்டுப் போட்டிகள் நடத்திட தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

பல்வேறு நிகழ்ச்சிகள்
இதேபோல் முதலமைச்சரின் 70வது பிறந்தநாளையொட்டி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம்களை நடத்துதல், விளையாட்டுத் துறையில் சாதிக்க நினைக்கும் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்துதல், அரசியல் அறிவுத் தேடலுக்கான கருத்தரங்குகள், கவியரங்கம், பட்டிமன்றங்கள் நடத்துதல், மருத்துவ முகாம்களை நடத்துதல், இரத்த தான முகாம்களை நடத்துதல், மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச மூன்று சக்கர வாகனங்கள் வழங்குதல் போன்ற பணிகளைக் திமுக மாணவர் அணி நிர்வாகிகள் அனைவரும் தங்கள் பகுதியில் நடத்திட வேண்டும் என்று தீர்மானிக்கப்படுகிறது.

பெண்ணுரிமை
உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் 'மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்' பெயரிலான திட்டத்தை சமூக மாற்றத்திற்கான விதையாக "புதுமைப் பெண்" என்ற புரட்சிகர திட்டத்தை இந்திய ஒன்றியம் மட்டுமல்ல; உலகமே வியந்து பார்க்கும் வகையில் செயல்படுத்தி திட்டத்தின் முதல் கட்டத்தில் 1,16,342 மாணவிகள் பயன்பெற்று வருகிறார்கள். மேலும், இத்திட்டத்தை முதலமைச்சர் கொண்டு வந்ததன் விளைவாக, கல்லூரிகளில் சேர்ந்து பொருளாதார சூழ்நிலையில் கல்வி கற்க இயலாமல் இடைநிற்றலான 12,000 மாணவிகள் மீண்டும் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கதாகும். இந்நிலையில், புதுமைப் பெண் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக தற்போது 1,04,347 மாணவிகள் கூடுதலாக இத்திட்டத்தில் இணைந்துள்ளனர். திருமண தகுதி வருவதற்கு முன்பே, ஒரு பெண்ணுக்கு கல்வி என்னும் நிரந்தர சொத்தை வழங்க வேண்டும் என்று "பெண்ணுரிமை" காக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, மாணவர் அணி தமது உளமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது.

முதல்வருக்கு நன்றி
டெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களை இனவெறி கொண்டு தாக்கிய, ABVP அமைப்பை கண்டித்தும், பாதிக்கப்பட்ட மாணவருக்கு ஆறுதலையும் தெரிவித்த முதலமைச்சர் அவர்களுக்கும், இளைஞர் அணிச் செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கும் தி.மு.க. மாணவர் அணியின் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றியினை இக்கூட்டம் பதிவு செய்கிறது.












Click it and Unblock the Notifications