விஜய் வந்த 10வது நாளில்.. கொங்கு மண்டலத்தில் மாஸ் பிளான் போடும் திமுக.. களமிறங்கும் கனிமொழி
திருப்பூர்: 2026 சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு சில மாதங்கள் தான் உள்ளன. அரசியல் கட்சிகள் பரபர தேர்தல் வியூகங்களுடன் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர். தேர்தலுக்காக திமுக அடுத்தடுத்து பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகிறார்கள். தவெக தலைவர் விஜய் நாளை மறுநாள் ஈரோடு மாவட்டத்திற்கு செல்கிறார். கொங்கு மண்டலத்தை குறிவைத்து விஜய் காய் நகர்த்துகிறார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக சார்பில்" திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாடு திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறவுள்ளது. கனிமொழி தலைமையில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக சீனியர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், '1.31 கோடி மகளிருக்கு 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை', 'விடியல் கட்டணமில்லா பேருந்துப் பயணம்', கல்வி கற்கும் மாணவிகளுக்கு 'புதுமைப் பெண் திட்டம்', வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பாதுகாப்பான 'தோழி விடுதி', இந்தியாவிலேயே அதிக அளவாக 43 சதவீதம் வேலைக்குப் போகும் பெண்களைக் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்வதற்கான சூழல் என மகளிர் மேம்பாட்டுக்காக தொடர்ச்சியான திட்டங்களை வகுத்து வருகிறோம்.

திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாடு
அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்ற, துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் வருகிற 29.12.2025 தேதி (திங்கள்கிழமை) மாலை 4.00 மணியளவில், திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில், வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்கிற தலைப்பில் திமுக மேற்கு மண்டல மகளிர் மாநாடு நடைபெற உள்ளது.
அமைச்சர்கள் முத்துசாமி, மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ், மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மேயர்கள், நகராட்சி தலைவர்கள் இணைந்து இந்தப் பணிகளை ஒருங்கிணைப்பார்கள்." என்று கூறப்பட்டுள்ளது. அமைச்சர் சாமிநாதன் மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் மாநாட்டு பணிகளை ஒருங்கிணைக்கவுள்ளனர்.
மேற்கு மண்டலம் டார்கெட்
சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை தக்க வைக்க திமுக தீவிரமாக காய் நகர்த்தி வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலையில் திமுக வடக்கு மண்டல இளைஞரணி மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதேபோல மகளிர் உரிமைத் தொகை இரண்டாம் கட்ட விரிவாக்க நிகழ்ச்சி, வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்கிற பெயரில் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக மேற்கு மண்டலத்தில் மகளிரணி மாநாட்டை நடத்தவுள்ளனர். இதுகுறித்து கொங்கு மண்டலத்தில் உள்ள திமுகவினர் கூறுகையில், "கொங்கு மண்டலத்தில் கடந்த சட்டமன்ற தேர்தல்களில் திமுக தோல்வியடைந்துள்ளது. இந்தமுறை அதை சரி செய்ய முயற்சி செய்து வருகிறோம். கட்சியில் பதவிகளை பரவலாக்கம் செய்திருக்கிறோம்.
விஜய்க்கு பதிலடி
அமைச்சர் சக்கரபாணி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மேற்கு மண்டல பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். கோவை மக்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்த செம்மொழி பூங்கா திறக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் சர்வதேச ஹாக்கி மைதானம், பெரியார் நூலகம் திறப்பு போன்ற நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. மேலும் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெறவுள்ளது.
இளைஞரணி, மகளிரணி கூட்டங்களை மண்டல வாரியாக நடத்தி ஒவ்வொரு பகுதியிலும் கட்சியை பலப்படுத்துவது தான் திட்டம். வருகிற 18 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் பகுதி பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளார். கொங்கு மண்டலத்தை குறிவைத்து விஜய் பயணிக்கும் நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மகளிர் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தவுள்ளோம். இதில் திமுகவின் மூத்த தலைவர்கள் அனைவரும் கலந்துகொள்ளவுள்ளனர்." என்றனர்.












Click it and Unblock the Notifications