ஈரோட்டில் "அர்த்த ராத்திரியில்"தட்டப்படும் வீடுகள்..அந்த சிசிடிவி கேமராவை பார்த்ததுமே, ஆடிப்போன ஜனம்
ஈரோடு: ஈரோட்டில் நடந்த சம்பவம் ஒன்று தற்போது இணையத்தில் வீடியோவாக வெளியாகி பரபரப்பை தந்துள்ளது.. அப்படியென்ன அங்கு நடந்துவிட்டது?
சில நாட்களுக்கு முன்பு, சென்னையின் புறநகர் பகுதிகளிலிருந்து, வித்தியாசமான புகார் போலீசாருக்கு சென்றது.. காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள் கோவில் ஊராட்சி, பெரிய விஞ்சியம்பாக்கம் பகுதியில், 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

தொழிற்சாலைகள்: இந்த பகுதியில், தென் மாவட்டங்களை சேர்ந்த இளம்பெண்களும், ஆண்களும் ஏராளமானோர் வாடகைக்கு தங்கி, மகேந்திரா சிட்டி, ஒரகடம், மறைமலை நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில், வேலை பார்த்து வருகிறார்கள்..
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு, பெரிய விஞ்சியம்பாக்கம் பகுதியில், நைட் நேரத்தில், யாரோ ஒருவர் முகமூடி அணிந்துக்கொண்டு, கையில் கிரிக்கெட் பேட்டுடன் வீடுகளையே சுற்றி சுற்றி வருகிறாராம்.. எப்போதுமே அரை நிர்வாணமாகவே காணப்படுகிறாராம்.
நள்ளிரவு: நள்ளிரவில் சுற்றித் திரிந்த அந்த நபரைக் கண்ட குடியிருப்புவாசிகள் எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.. அதனால், அந்த பகுதியில் ரோந்து பணியில் இருந்த மறைமலை நகர் போலீசாருக்கு தகவல் சொல்லவும், அவர்களும் அந்த நபரை பிடிக்க முயன்றனர். ஆனால், போலீஸை பார்த்ததுமே, அங்கிருந்த சீமைக்கருவேல மர புதருக்குள் ஓடிச்சென்று தப்பிவிட்டார்.. ஆனாலும், அந்த பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து, அந்த நபரை தேடி கொண்டிருக்கிறார்கள்.
அந்த நபர் ஏன் அரைநிர்வாண கோலத்தில் திரிகிறார்? கையில் எதற்காக கிரிக்கெட் பேட் வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை. இந்த மர்ம நபரால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன்பு, அவரை போலீசார் கைது செய்ய வேண்டும் என, குடியிருப்புவாசிகளும் வலியுறுத்தியுள்ளனர்.
யார் அவர்: இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள்ளேயே ஈரோட்டில் இன்னொரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. ஈரோடு அருகே சோலார் ஈ.பி.நகரில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன... இந்த பகுதியில் கடந்த சில நாட்களாகவே, நள்ளிரவில் யாரோ நடமாடுவதை போலவே இருக்கிறதாம்.. யாரோ தங்களுடைய வீட்டை தட்டுவது போலவே இருக்கிறதாம்.
கதவை திறந்து கொண்டு வந்து பார்த்தால் ஒருவருமே இருப்பதில்லையாம்.. ஆனால், மர்ம நபர் அந்த பகுதியில் நடமாடுவதை ஒருசிலர் கவனித்துள்ளனர்.. அதனால் பயந்துபோன அந்த பகுதி மக்கள், பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில், அதே உருவம் பதிந்துள்ளதா என்று கண்காணித்தனர். அதன்படியே, அதே பகுதியில் அந்த மர்ம நபர் சுற்றி சுற்றி வருவது பதிவாகியிருந்தது..
சிசிடிவி கேமரா: அதிலும், கடந்த 9-ந் தேதி பதிவாகியிருந்த அந்த சிசிடிவி வீடியோவை பார்த்து பதறிப்போய்விட்டார்கள் பொதுமக்கள்.. அந்த மர்ம நபர், கையில் கூர்மையான கத்தியுடன் எல்லார் வீட்டு கதவையும் நள்ளிரவில் தட்டுவதும், காலிங் பெல்லை அழுத்துவதுமாக இருக்கிறாராம்.
வீடு, வீடாக கதவை தட்டுவது, காலிங் பெல்லை அடித்து சிறிது நேரம் நிற்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் பெண்கள் குழந்தைகள் என அனைவருமே ஒருவித அச்சத்துடனேயே இருந்து வருகிறார்கள்.. இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசாருக்கு புகாரையும் தெரிவித்திருக்கிறார்கள்.. எந்த அசம்பாவிதமும் ஏற்படுவதற்கு முன்பு, அந்த நபரை பிடிக்க வேண்டும் என்றும் போலீசாருக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.. இந்த மர்ம நபரின் வீடியோதான் இணையத்தில் தற்போது வெளியாகியிருக்கிறது..!












Click it and Unblock the Notifications