ஊருக்காக ஆடிய கலைஞன் ராஜய்யன்! சலங்கைகளுடனே சரிந்த கால்கள்! கூத்து கட்டிய போதே காற்றில் கலந்த ஆத்மா!
ஈரோடு : ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தெருக்கூத்து நாடகத்தில் நடித்த கலைஞர் ஒருவர் கூத்து ஆடிக்கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்து உயிரிழந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதோடு, பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழர்களின் தொன்மையான கலைகளில் ஒன்றான கூத்துக்கலை கடந்த சில ஆண்டுகளாக அழிந்து வருகிறது. குறிப்பாக மேடைகள், அலங்காரங்கள் இல்லாத தெருக்கூத்து, மிகப்பெரிய வீழ்ச்சியை கண்டுள்ளது.
சினிமா, தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள் ஆக்கிரமித்துள்ள இந்த காலத்தில், கூத்துக்கலை கிட்டத்தட்ட அழிந்தே விட்ட நிலையில், பெரும்பாலான கூத்துக் கலைஞர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக, மாற்று தொழிலில் ஈடுபடுகின்றனர். சிலர் மட்டும் இன்னும் அதிலேயே நீடிக்கின்றனர்.

தெருக்கூத்து
இந்நிலையில் சத்தியமங்கலம் அருகே தெருக்கூத்து நாடகத்தில் நடித்த கலைஞர் ஒருவர் கூத்து ஆடிக்கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்து உயிரிழந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதோடு, பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள குப்பன்துறை கிராமத்தில் கடந்த இரண்டு நாட்களாக இரணியன் நாடகம் தெருக்கூத்து நடைபெற்று வருகிறது.

ராஜய்யன்
இந்த தெருக்கூத்தில் அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜய்யன் என்பவர் வேடமிட்டு நடித்து வந்தார். நேற்று இரவு தெருக்கூத்து நடந்த போது ராஜய்யன் இரணியன் நாடகத்தில் வேடமிட்டு நடித்துக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனே அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு சத்தியமங்கலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

திடீர் மரணம்
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு காரணமாக ராஜய்யன் உயிரிழந்ததாக தெரிவித்தனர். தெருக்கூத்து நாடகத்தில் நடிக்கும் போது மயங்கி விழுந்து உயிரிழந்த வீடியோ வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த நிகழ்வு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கோரிக்கை
மேலும் கூத்து கலை மீது கொண்ட பற்றுதல் மற்றும் வாழ்வாதாரத்திற்காக கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கூத்து கலைஞராக பல வேடங்களை ஏற்று நடித்து வந்த ராஜய்யனின் குடும்பம் மிகவும் வறுமையில் உள்ளதாகவும் அவரது குடும்பத்தினருக்கு தமிழக அரசு உதவிட முன்வர வேண்டும் எனவும் கூறி வருகின்றனர். இதே கோரிக்கை சமூக வலைதளங்களிலும் பலராலும் முன் வைக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications