“அடையாளம் கொடுத்தது அதிமுக! ஆனால்..” செங்கோட்டையன் மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி தாக்கு!
ஈரோடு: கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். பிரச்சார கூட்டத்தில் அவர் பேசுகையில், "உங்களை அடையாளப்படுத்தியது, பதவி கொடுத்தது அதிமுக. ஆனால், இன்று மாற்றுக்கட்சியில் இணைந்திருக்கிறார்" என்று செங்கோட்டையன் மீது சரமாரியான விமர்சனங்களை அடுக்கியுள்ளார்.
கோபிசெட்டிபாளையம் அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்டு வந்தது. இந்த கோட்டையின் தளபதியாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.

செங்கோட்டையனின் பிரச்சாரம்
இணைந்தவர், நேற்று கோபிசெட்டிபாளையத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவருக்கு பரவலாக வரவேற்பு இருந்தது. இந்நிலையில், இந்த தொகுதி அதிமுகவின் கோட்டை, தனிநபரின் செல்வாக்கு பெற்ற தொகுதி அல்ல என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு எடப்பாடி பழனிசாமி தள்ளப்பட்டார். இதனையடுத்து இன்று கோபியில் பிரச்சாரம் மேற்கொண்டிருக்கிறார்.
இந்த பிரச்சாரத்தில் தவெகவை விட அதிக கூட்டத்தை திரட்ட வேண்டும் என்று கட்சி தலைமை உத்தரவிட்டிருந்தது. குறைந்தது 50,000 பேரையாவது திரட்ட உத்தரவிட்டிருந்தது. அதேபோல அதிக அளவில் தொண்டர்களை நிர்வாகிகள் திரட்டியுள்ளனர்.
அடையாளப்படுத்தி பதவி கொடுத்தது அதிமுக
பிரச்சாரக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, "இந்த தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்று யார் யாரோ கனவு காண்கிறார்கள். ஆனால் இது அதிமுகவின் கோட்டை. கோபிச்செட்டி பாளையத்தில் அதிமுக வேட்பாளர் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார். வாக்குகளை கேட்க வீடு வீடாக வந்தவர், ராஜினாமா செய்ய மக்களிடம் அனுமதி கேட்டாரா?
அத்திக்கடவு அவினாசி திட்டத்தின் பாராட்டு விழா நிகழ்ச்சிக்கு செங்கோட்டையன் வரவில்லை. கேட்டால் அம்மா படம் இல்லை, எம்ஜிஆர் படம் இல்லை என்று காரணம் கூறினார். உண்மை காரணம் அதுவல்ல. அவரை அடையாளப்படுத்தியது, பதவி கொடுத்தது அதிமுக. ஆனால் இன்று மாற்றுக்கட்சிக்கு சென்றிருக்கிறார். இவரா உங்களுக்கு நன்மை செய்ய போகிறார்? இவர் மக்கள் மீது அக்கறை கொண்டவரா?
எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
இவர் எடுத்த எடுப்பில் கட்சியிலிருந்து நீக்கப்படவில்லை. அவருடைய செயல்பாடுகளில் விதிமீறல் இருந்தது. கட்சி கட்டுப்பாட்டை மீறி நீக்கப்பட்டவர்களை சந்தித்தார். இருப்பினும் நாங்கள் கண்டுக்கொள்ளவில்லை. ஆனால், அவர் திருந்தவில்லை. மனம் திறந்து பேட்டி கொடுப்பேன் என்று சொல்லி கோபியில் பேட்டி கொடுத்தார். 10 நாட்கள் எனக்கு கெடு விதித்தார். தலைமைக்கு எச்சரிக்கை கொடுத்தவரை, எப்படி கட்சியில் வைத்துக்கொள்வது? மூத்த தலைமை நிர்வாகிகளுடன் ஆலோசித்து பதவியிலிருந்து விடுவித்தோம். அப்போது கூட திருந்தவில்லை.
விதிமீறல்
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நிகழ்ச்சிக்கு சென்றார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள், கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களுடன் தொடர்பு கூடாது என பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியிருந்தோம். தீர்மானத்திற்கு எதிராக நீக்கப்பட்டவர்களோடு நிகழ்ச்சிக்கு சென்றார் செங்கோட்டையன். எனவேதான் தலைமை கழக நிர்வாகிகளுடன் பேசி கட்சியிலிருந்து நீக்கினோம். இவர் கடந்த 2 -3 ஆண்டுகளாக உள்ளிருந்து துரோகம் செய்தவர். நல்லது செய்தவர்களுக்கு நல்லதே நடக்கும். கெடுதல் செய்தவர்களை ஆண்டவர் பார்த்துக்கொள்வார்.
வெற்றி நிச்சயம்
தற்போது மாற்றுக் கட்சிக்கு சென்றார். எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும். ஆனால், தூய்மையான ஆட்சியை கொடுப்போம் என்று பேசியிருக்கிறார். அப்படியெனில் நான் தூய்மையான ஆட்சியை கொடுக்கவில்லையா? கட்சி துண்டு மாறிய பின்னர் எல்லாம் மாறிவிட்டது.
எப்படி இருப்பினும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெல்லும். கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் நிச்சயம் வெற்றி பெறுவோம். வெற்றி பெற்று கோபிசெட்டிபாளையத்தில் வந்து வெற்றி விழா கொண்டாடுவோம்" என்று பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications