தனிக்காட்டு ராஜா.. ரேசில் விலகிய ஓபிஎஸ், டிடிவி! ஈரோட்டில் சிந்தாமல் சிதறாமல் விழுமா அதிமுக ஓட்டு?
ஓ.பன்னீர்செல்வமும், டிடிவி தினகரனும் ஈரோடு கிழக்கு தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளதால் அதிமுக ஆதரவாளர்களின் வாக்கு பிரியாமல் இரட்டை இலைக்கு விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி ஒரு வேட்பாளரையும், ஓ.பன்னீர்செல்வம் மற்றொரு வேட்பாளரையும், அமமுக சார்பில் டிடிவி தினகரன் ஒரு வேட்பாளரையும் நிறுத்திய நிலையில் தற்போது ஓ.பன்னீர்செல்வமும், டிடிவி தினகரனும் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளதால் அதிமுக ஆதரவாளர்களின் வாக்கு சிதறாமல் இரட்டை இலைக்கு விழும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் சசிகலா, ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இடையே மோதல் ஏற்பட்டு கட்சி மூன்றாக உடைந்தது. இதில் சசிகலா சிறைக்கு சென்றுவிட டிடிவி தினகரன் தனியாக அமமுக கட்சியை தொடங்கி அதிமுகவில் உள்ள தனது ஆதரவாளர்களை பிரித்து சென்றார்.
எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் முரண்பாடுகளை கடந்து ஒன்றாக 2019 மக்களவைத் தேர்தல் மற்றும் 2021 சட்டசபைத் தேர்தல்களை எதிர்கொண்டனர். இந்த தேர்தல்களில் சசிகலா, டிடிவி தினகரன் ஆதரவு வாக்குகளை அமமுக பிரித்து சென்றது.

அதிமுக பிளவு
தேர்தலில் அந்த கட்சி போட்டியிடாவிட்டாலும் சில தொகுதிகளில் அதிமுகவின் தோல்விக்கும் அக்கட்சி காரணமாக அமைந்தது. கடந்த 8 மாதங்களாக எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் ஆகியோருக்கு மத்தியிலும் மோதல் ஏற்பட்டு இரு அணிகளாக உடைந்து நிற்கிறது அதிமுக. கட்சியும் சின்னமும் யாருக்கு வழக்கு தொடர்ந்து இருவரும் சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
இந்த நிலையில்தான் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவேரா மறைவால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் காங்கிரஸ், தேமுதிக, அமமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளரை அறிவித்த் நிலையில் அதிமுக இதை அறிவிப்பதில் தாமதம் காட்டியது. ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையிலான உட்கட்சி பூசலால் வேட்பாளர் தேர்வில் குழப்பம் ஏற்பட்டது.

அதிமுக வேட்பாளர் யார்?
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசுவை ஈரோடு கிழக்கு வேட்பாளராக அறிவித்தார். செந்தில் முருகன் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். டிடிவி தினகரனின் அமமுக வேட்பாளராக சிவபிரசாத் அறிவிக்கப்பட்டார். இதனால் இரட்டை இலை சின்னம் முடங்கும் என்றும், அதிமுக ஆதரவாளர்களின் வாக்குகள் மூன்றாக பிரியும் என்று கூறப்பட்டது.

பொதுக்குழு உறுப்பினர்களுக்கு கடிதம்
இந்த நிலையில், நேற்று தங்கள் தரப்பு வேட்பாளரை வாபஸ் பெறுவதாகவும், இரட்டை இலைக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். அதே நேரம் தென்னரசுவை வேட்பாளராக ஏற்பதாக பொதுக்குழு உறுப்பினர்கள் வழங்கியதாக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் வழங்கிய கடிதத்தை தேர்தல் ஆணையம் ஏற்றது.

ஓபிஎஸ், டிடிவி விலகிய
அதிமுக அவைத் தலைவராக தமிழ் மகன் உசேனை அங்கீகரித்த தேர்தல் ஆணையம் தமிழ்மகன் உசேன் கையெழுத்திட அனுமதித்தது. இதன் மூலம் எடப்பாடி பழனிசாமியால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் தங்களுக்கு குக்கர் சின்னம் ஒதுக்காததால் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் டிடிவி தினகரன்.

நேரடி போட்டி
தேர்தல் போட்டியில் இருந்து விலகிய ஓ.பன்னீர்செல்வம் இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவளிப்போம் என்று அறிவித்து இருக்கும் நிலையில் டிடிவி தினகரனும் போட்டியில் இருந்து விலகியதால் அதிமுக ஆதரவாளர்களின் வாக்குகள் சிதறாமல் எடப்பாடி ஆதரவு அதிமுக வேட்பாளருக்கு சிதறாமல் விழும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications