பாஜக எம்எல்ஏவின் மருமகன்.. ஈரோடு அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரின் சொத்து மதிப்பு ரூ.583 கோடி
ஈரோடு : ஈரோடு லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரின் சொத்து மதிப்பு ரூ.583 கோடி என்று தகவல் வெளியாகி உள்ளது. பாஜக எம்எல்ஏ சிஆர் சரஸ்வதியின் மருமகனாகிய ஆற்றல் அசோக்குமாரிடம் 10.1 கிலோ தங்க நகையும், அவரது மனைவியிடம் 10.6 கிலோ தங்க நகையும் உள்ளதாக தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈரோடு தொகுதியில் அதிமுக சார்பில் ஆற்றல் அசோக்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போது, கொங்கு மண்டலத்தில் பல அரசியல்வாதிகள் மூக்கின் மேல் விரல் வைத்தனர். இவரையா எடப்பாடி பழனிசாமி வேட்பாளராக அறிவித்தார் என்று ஆச்சரியத்துடனும் திகைப்புடனும் பார்த்தார்கள்.. ஏனெனில் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் குடும்பம் பாஜக பாராம்பரிய குடும்பம் ஆகும்.

அவரது அத்தையான டாக்டர் சிஆர் சரஸ்வதி, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் பாஜக சார்பில் எம்எல்ஏவாக வெற்றி பெற்றவர். வெறும் நான்கு மாதங்களுக்கு முன்பு தான் ஆற்றல் அசோக்குமார் அதிமுகவில் இணைந்தார். அப்படிப்பட்டவரை ஈரோடு தொகுதி வேட்பாளராக எடப்பாடி அறிவித்த போது திகைப்பு எழுந்தது.
ஆற்றல் அசோக்குமாரின் சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள புதுப்பாளையம் கிராமம் ஆகும்.. அசோக்குமாரின் தந்தை கணித பேராசிரியர். தாய் தமிழ் பேராசிரியர்.. ஆற்றல் அசோக்குமார் சொந்த ஊரிலேயே அரசு உதவி பெறும் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார்..
அதன்பின்னர் 1987ம் ஆண்டு கோவையில் உள்ள தொழில் நுட்ப கல்லூரியில் மின் பொறியியல் பட்டம் பெற்றார். அதன்பின்னர் அமெரிக்கா சென்ற ஆற்றல் அசோக்குமார் அங்கு உள்ள பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் முதுகலைப்பட்டம் பெற்றதுடன், கணிணி பொறியியல் பட்டமும் பெற்றார்.
அசோக்குமார் கடந்த 1992 முதல் 2005 வரை மைக்ரோசாப்ட், இன்டெல் உள்ளிட்ட பல்வேறு பன்னாட்டு சாப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்றினார். அதன்பின்னர் சொந்த ஊர் திரும்பிய அசோக்குமார், தன் தாய் தந்தையை போல் பெரிய கல்வியாளராக உருவெடுக்க விரும்பினார். அதற்காக கல்வி நிறுவனம் ஒன்றையும் தொடங்கினார்... இவர் தற்போது டிப்ஸ் கலை அறிவியல் கல்லூரி, டிப்ஸ் குளோபல் இன்ஸ்டிடியூட், தி இந்தியன் பப்ளிக் பள்ளி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார்..
இவர் கொரோனா காலத்திற்கு பின்பு முழுமையாக ஆற்றல் என்ற தொண்டு நிறுவனம் தொடங்கி பல்வேறு சேவைகளை செய்து வருகிறார்கள். சீர்குலைந்த அரசு பள்ளிகளை அரசின் அனுமதி பெற்று மேம்படுத்த தொடங்கினார். இதுவரை 100க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளை அசோக்குமார் புணரமைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் ஆற்றல் அறக்கட்டளை மூலம் 10 ரூபாய்க்கு உணவு, 10 ரூபாய் மருத்துவம் போன்ற சேவைகளை செய்து வருகிறார்.
இந்நிலையில் ஈரோடு லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் அண்மையில் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், அவரது வேட்பு மனுவில் சொத்து மதிப்பு எவ்வளவு, நகைகள் எவ்வளவு உள்ளது. அசையும் சொத்து மதிப்பு எவ்வளவு, அசையா சொத்து மதிப்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்படி ஆற்றல் அசோக்குமாரின் சொத்து மதிப்பு ரூ.583 கோடி என்று தகவல் வெளியாகி உள்ளது.
வங்கி கணக்கில் சுமார் ரூ.7 கோடி இருப்பதாகவும், அசையும் சொத்து - ரூ.526.53 கோடி என்றும் அசையா சொத்து - ரூ.56.95 கோடி என்றும் கூறப்படுகிறது. ஆற்றல் அசோக் குமாரிடம் 10.1 கிலோ தங்க நகையும், மனைவியிடம் 10.6 கிலோ தங்க நகையும் உள்ளது என்றும் ஆற்றல் அசோக் குமாரின் மனைவி கருணாம்பிகையின் சொத்து மதிப்பு ரூ.47 கோடி என்றும் வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவர் பெயரிலும், வீடுகள், அலுவலகங்கள், காலி இடங்கள் உள்ளதாக வேட்பு மனுவில் தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications