ஈரோடு தேர்தல்.. காங்-க்கு கை, அதிமுகவுக்கு இரட்டை இலை.. நாம் தமிழர் கட்சிக்கு என்ன சின்னம் தெரியுமா
ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர்களுக்குச் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்புமனுவை வாபஸ் பெற கால அவகாசம் முடிந்த நிலையில், வேட்பாளர்களுக்குச் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மறைவைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. சில வாரங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது.
இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் திருமகன் ஈவேரா தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதேபோல அதிமுகவில் இருந்து தென்னரசு இந்த தேர்தலில் களமிறங்குகின்றனர்.

ஈரோடு கிழக்கு
இன்றுடன் வேட்பு மனுவைத் திரும்பப் பெறக் கடைசி தேதியும் நிறைவடைந்துவிட்டது. மொத்தம் ஈரோடு கிழக்கு தொகுதியில் 77 பேர் போட்டியிடுகின்றனர். வரும் பிப்.27ஆம் தேதி தேதி தேர்தல் நடைபெறும் நிலையில் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இடைத்தேர்தலில் நிச்சயம் வெல்ல வேண்டும் என்பதால் காங்கிரஸ் வேட்பாளரை அறிவிக்கும் முன்பு இருந்தே திமுக பிரசாரத்தைத் தொடங்கிவிட்டனர். ஈரோட்டில் அமைச்சர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதிமுக
இடைத்தேர்தலில் வரும் நாட்களில் முதல்வர் ஸ்டாலினும் பிரசாரம் செய்ய உள்ளார். அதேபோல திமுக சார்பிலும் காங்கிரஸ் சார்பிலும் தனியாகக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதிமுக தரப்பில் முதலில் குழப்பம் நிலவிய நிலையில், வேட்புமனு தாக்கலுக்கு ஒரு நாள் இருக்கும் போது குழப்பம் நீக்கியது. அதிமுகவில் இருந்து எடப்பாடி அறிவித்த தென்னரசு வேட்பாளராக இறங்கினார். இந்த இடைத்தேர்தலில் எப்படியாவது வென்று ஆளும் தரப்பிற்கு அதிர்ச்சி தர வேண்டும் என்பதில் எடப்பாடியும் உறுதியாக உள்ளார்.

சின்னங்களை ஒதுக்கும் பணி
அதேபோல அனைத்து தேர்தல்களைப் போலவே இந்த இடைத்தேர்தலிலும் நாம் தமிழர் தனித்தே களமிறங்குகிறது. இது தவிர தேமுதிகவும் போட்டியிடுகிறது. சுயேச்சைகளாக பலரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், மொத்தம் 77 பேர் களத்தில் உள்ளனர்.. வேட்புமனுவை வாபஸ் பெறும் கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், சின்னங்களை ஒதுக்கும் பணி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதிமுகவுக்கு இரட்டை இலை
அதிமுக வேட்பாளர் தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. முன்பு, அதிமுக வேட்பாளர்கள் என்று ஓபிஎஸ் தரப்பும் எடப்பாடி தரப்பும் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்தனர். ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வேட்புமனு தாக்கலும் செய்தார். இருவரும் இரட்டை இலைக்கு உரிமை கோரியதால் சின்னமே முடங்கும் சூழல் உருவானது. இருப்பினும், அதற்குள் சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டனர். இந்தச் சூழலில் தான் தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர், தேமுதிக
அதேபோல வழக்கம் போல இந்தத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்துக் களமிறங்கும் நிலையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவுக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல இந்தத் தேர்தலில் தனித்துக் களமிறங்கியுள்ள தேமுதிக கட்சிக்குக் கொட்டும் முரசு சின்னம் வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி சுயேச்சை வேட்பாளர்களுக்கும் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.












Click it and Unblock the Notifications