ஈரோட்டில் பண்ணாரி ரோட்டில் மரத்தின் மீது உட்கார்ந்திருப்பது யார் பாருங்க.. சிதறி ஓடிய சத்தியமங்கலம்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ரோட்டில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. இதை பார்த்து பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. அந்த வழியாக சென்றவர்கள் இதை வீடியோவில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
இந்த வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது.. இதை பார்த்து நெட்டிசன்களும் ஆடிப்போய்விட்டார்கள்.. என்ன நடந்தது பண்ணாரி ரோட்டில்?
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன.. இந்த வனப்பகுதியில் இங்கு புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமைகள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

பண்ணாரி ரோட்டில்
இந்த காட்டின் வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளன..
தமிழக - கர்நாடகா இடையே மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக இந்த திம்பம் மலைப்பாதை விளங்கி வருவதால், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வந்தபடி இருக்கும்.. குறிப்பாக பண்ணாரி அம்மன் சோதனைச் சாவடியில் வனத்துறையினர் மற்றும் போலீசார் 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தடுப்பு சுவர்களில் விலங்குகள்
எனினும், தண்ணீர் குடிக்க, இரை தேடி இரவு நேரங்களில் இந்த பாதைகளில் யானை, புலி, சிறுத்தைகள் போன்ற வனவிலங்குகள் நடமாடுவதும் சகஜமாகிவிட்டது.
சிலசமயம் சாலையோர தடுப்பு சுவரில், இரவு நேரத்தில் சிறுத்தைகள்கூட உட்கார்ந்து விட்டு போகும். எனவேதான் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அதிக கவனத்துடன் செல்ல வேண்டும், குறிப்பாக வாகனங்களை நிறுத்தி இறங்குவது, வன விலங்குகளை அருகில் நின்று பார்ப்பது, போட்டோ எடுப்பது போன்ற ஆபத்தான காரியங்களை செய்யக்கூடாது என்றெல்லாம் வனத்துறையினர் தொடர்ந்து அறிவுறுத்திக் கொண்டே வருகிறார்கள்..
மரத்தின் மீது யார் பாருங்க
இந்நிலையில், பண்ணாரி அம்மன் கோவில் அருகே மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள ஒரு மரத்தின் மீது சிறுத்தை உட்கார்ந்திருந்ததாம்...
ஆரம்பத்தில் பலரும் சகஜமாக வாகனங்களில் சென்று வந்த நிலையில், பிறகுதான் மரத்தின் மீது உட்கார்ந்திருந்த சிறுத்தையை கண்டு, அதிர்ச்சி அடைந்தனர்.. இத்தனைக்கும் அந்த நேரத்தில், அந்த பகுதியில் வழக்கம்போல் போக்குவரத்து இருந்து கொண்டிருந்ததாம்..
மரத்தின் மீது உட்கார்ந்திருந்த சிறுத்தை வெகு நேரமாக அசையாமல் இருந்திருக்கிறது.. அதனால்தான் அது யார் கண்ணுக்கும் முதலில் தென்படவிலலை.. பிறகு சிறுத்தையை கண்ட வாகன ஓட்டிகள் தங்களது செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சிறுத்தை மரத்திலேயே உட்கார்ந்திருந்ததாம்.. பிறகு அந்த சிறுத்தை மரத்திலிருந்து கீழே இறங்கி, மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றுள்ளது.
சிதறிய சத்தியமங்கலம்
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அதிக கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் மறுபடியும் அறிவுறுத்தியுள்ளனர். குறிப்பாக இருசக்கர வாகனத்தில் பயணம் செய்பவர்கள் வனப்பகுதிகளில் எக்காரணம் கொண்டும் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபகாலமாக வன எல்லைப் பகுதிகளுக்கு அருகே உள்ள கிராமங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
இரவு நேரங்களில் வீடுகளின் வெளிப்புற விளக்குகளை எப்போதும் எரியவிட வேண்டும். வீட்டருகே குப்பைகள், உணவுக் கழிவுகள், இறைச்சி கழிவுகளை கொட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்றெல்லாம் வேண்டுகோள்களும் எழுந்துள்ளன.. பண்ணாரி சாலையோரம் மரத்தின்மீது சிறுத்தை உட்கார்ந்த வீடியோதான் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது..












Click it and Unblock the Notifications