விக்கித்த வில்லரசன்பட்டி.. என்னங்க நடக்குது? தனியார் விடுதியில் சீறிய எடப்பாடி.. கவனித்த மாஜிக்கள்!
முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், சி.வி.சண்முகம், தங்கமணி உள்ளிட்ட பலர் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
ஈரோடு: ஈரோடு மாவட்டம் வில்லரசன்பட்டியில் இருக்கும் தனியார் விடுதி ஒன்றில் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவு அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் பெரும் போராட்டத்திற்கு பின் எடப்பாடி பழனிசாமி ஆதரவு வேட்பாளர் கே. எஸ் தென்னரசு களமிறக்கப்பட்டு உள்ளார். இவருக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் ஈரோடு கிழக்கில் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டார்.
ஈரோடு கிழக்கில் வாகன பிரச்சாரம் மேற்கொண்டவர் திமுகவை கடுமையாக எதிர்த்து பேசினார். தேர்தல் முடியும் வரை எடப்பாடி பழனிசாமி வாகன பிரச்சாரத்தை தீவிரப்படுத்துவார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

தேர்தல்
எடப்பாடி இப்படி பிரச்சாரத்தை தீவிரப்படுத்துவதற்கும் முக்கியமான சில காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஈரோடு கிழக்கில் தேர்தல் பணிகளை கவனிக்க, முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மா.செ.க்கள் உள்ளடக்கிய 117 பேர் கொண்ட மிகப்பெரிய தேர்தல் பணிக்குழுவை அமைத்தார் எடப்பாடி. ஆனால் கட்சியில் இருக்கும் மூத்த நிர்வாகிகள் பலர் தேர்தல் பணிகளை சரியாக கவனிக்காத நிலையில்தான் எடப்பாடியே தேர்தல் களத்தில் நேரடியாக இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. செங்குட்டுவன் தலைமையில் மாஜி அமைச்சர்கள் படையே அங்கே களமிறக்கப்பட்டு உள்ளது. தங்கமணி, வேலுமணி, தமிழ் மகன் உசேன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.அன்பழகன், காமராஜ், சி.வி.சண்முகம், பொன்னையன், செம்மலை, ஆகியோர் ஈரோடு கிழக்கில் நிர்வாகிகளாக நியமனம் செய்யப்பட்டனர்.

தேர்தல் பொறுப்பு
மேலும், சின்னசாமி, சி.விஜயபாஸ்கர், ஓ.எஸ்.மணியன், கடம்பூர் ராஜூ, உதயகுமார், தளவாய் சுந்தரம், வளர்மதி, தம்பிதுரை, செல்லூர் ராஜூ, தனபால், ராஜேந்திர பாலாஜி, ஜெயக்குமார், கே.பி.முனுசாமி, டுமலை ராதாகிருஷ்ணன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சேவூர் ராமச்சந்திரன் திண்டுக்கல் சீனிவாசன், பொள்ளாச்சி ஜெயராமன், என்று முன்னாள் அமைச்சர்கள் எல்லோரும் இங்கே எடப்பாடி மூலம் களமிறக்கப்பட்டு உள்ளனர். ஆனால் இவர்கள் யாரும் பெரிதாக தேர்தல் களத்தில் இல்லை. எஸ்பி வேலுமணி, தங்கமணி தவிர மற்றவர்கள் பெரிதாக தேர்தல் களத்தில் இல்லை. இந்த நிலையில்தான் தேர்தல் பணிகளை இவர்கள் யாரும் சரியாக செய்யவில்லை என்று எடப்பாடிக்கு புகார் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஆலோசனை
இதையடுத்தே ஈரோடு மாவட்டம் வில்லரசன்பட்டியில் இருக்கும் தனியார் விடுதி ஒன்றில் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவு அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். தேர்தல் பிரச்சாரத்தில் ஏற்பட்ட சுணக்கம் குறித்து ஆலோசனை செய்தார். முன்னாள் அமைச்சர்களுடன் எடப்பாடி 2 மணி நேரம் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. ஏன் நிர்வாகிகள் பெரிதாக பிரச்சார களத்திற்கு வரவில்லை. இப்படியே போனால் திமுக 60 சதவிகித வாக்குகளை வென்றுவிடும். அதற்கு விட கூடாது. தேர்தலில் நிர்வாகிகள் ஆர்வம் காட்டாதது ஏன்.. என்ன ஆனது என்று எடப்பாடி பழனிசாமி இந்த ஆலோசனையில் விசாரித்ததாக கூறப்படுகிறது.

மீண்டும்
நான் மீண்டும் பிரச்சாரம் செய்ய போகிறேன்.. அதுவரை நீங்கள் சரியாக பிரச்சாரம் செய்யுங்கள் என்று எடப்பாடி இதில் குறிப்பிட்டு இருக்கிறாராம். வரும் 24ம் தேதி ஈபிஎஸ் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள நிலையில் முன்னாள் அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு உள்ளார். முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், சி.வி.சண்முகம், தங்கமணி உள்ளிட்ட பலர் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications