ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்! அதிமுக தூது ரிஜெக்ட்! 'கை'க்கு கை கொடுத்த தமிமுன் அன்சாரி!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை அறிவித்தார் தமிமுன் அன்சாரி
சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு வழங்குவதாக மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார்.
தமிமுன் அன்சாரியை மீண்டும் அதிமுக கூட்டணிக்குள் அழைத்து வரும் முயற்சியை அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் முன்னெடுத்த நிலையில் அது தோல்வியில் முடிந்துள்ளது.
தமிழ்நாட்டின் நலன் கருதி ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் கைச் சின்னத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரிப்பதாக தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ. என இஸ்லாமிய இயக்கங்கள் அனைத்தும் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் தமிமுன் அன்சாரி மட்டும் தனது நிலைப்பாட்டை அறிவிக்காமல் இருந்து வந்தார். இவரிடம் காங்கிரஸ் தரப்பில் ஆதரவு கோரப்பட்ட நிலையில் பழைய கூட்டணிக் கட்சி என்ற முறையில் அதிமுக தரப்பிலும் தூது விடப்பட்டிருக்கிறது.

தேர்தல் பணிக்குழு
தொலைக்காட்சி விவாதங்களில் பலமுறை தன்னுடன் ஒன்றாக கலந்துகொண்டவர் என்ற அடிப்படையில் ஏற்கனவே பரிட்சயமுள்ள தமிமுன் அன்சாரியிடம், காங்கிரஸ் ஊடகப்பிரிவுத் தலைவர் கோபண்ணா பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். இதையடுத்து தமிமுன் அன்சாரி இன்று தனது இடைத்தேர்தல் நிலைப்பாட்டை ஒரு வழியாக அறிவித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தனது கட்சி சார்பில் 10 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு ஒன்றையும் தமிமுன் அன்சாரி அமைத்திருக்கிறார்.

முழுவீச்சில் பணி
மேலும், ஈரோடு கிழக்குத் தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றிக்காக மஜக முழுவீச்சில் பணியாற்றும் என அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்குத் தொகுதியில் இஸ்லாமியர்களின் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்யும் வகையில் அங்கு வலிமையான கட்டமைப்போடு விளங்கும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் ஆதரவையும் காங்கிரஸ் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

பிரச்சாரம்
நாளை முதல் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வரிசையாக ஈரோடு கிழக்கில் களமிறங்கவுள்ளதால் அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதனிடையே அதிமுக தரப்பில் இன்னும் வேட்பாளரே அறிவிக்கப்படாவிட்டாலும் அக்கட்சியினர் களப்பணியை தொடங்கிவிட்டனர்.












Click it and Unblock the Notifications